திருப்பூர்
கோவில் வளாகத்தில் காருக்குள் கல்லூரி மாணவியுடன் 2 மணிநேரம் இருந்த காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி உலகப்புகழ் பெற்றது ஆகும். இந்த நிலையில் நேற்று மதியம், சிவன்மலை மேல் ஒதுக்குப்புறமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
2 மணி நேரம்
அந்த காரில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும், இளம்பெண் ஒருவரும் இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக அவர்கள் காருக்குள்ளேயே இருந்து கொண்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோவில் பணியாளர்கள், காரின் அருகில் பார்க்க சென்றனர்.
கார் மோதல்
அப்போது காரில் இருந்த வாலிபர், அந்த பணியாளர்கள் மீது காரை ஏற்றுவது போல் அதிவேகமாக ஓட்டி வந்தார். பின்னர் கோவில் அடிவார நுழைவாயிலுக்கு கார் வந்தது. அப்போது அங்கு இருந்த தடுப்பில் கார் லேசாக மோதி நின்றது. இதைத்தொடர்ந்து அங்கு பணியில் இருந்த கோவில் பணியாளர்கள் அந்த காரை சுற்றிவளைத்தனர்.
இதன் பின்னர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அந்த இளம்பெண் கல்லூரி மாணவி என்பதும், இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று தெரிவித்தனர். கோவில் புனிதத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காதல் ஜோடிக்கு பணியாளர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். எனினும், கோவில் வளாகத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது, பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.
