சென்னை: சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான தொகை வரவு வைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் தேசிய முதியோர் ஓய்வூதியத்திட்டம், தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழ் சுமார் 19 லட்சத்து 20,858 பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
இந்த திட்டங்களின் கீழ் ஆகஸ்ட் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் பயனாளிகளுக்கான ஓய்வூதியப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் பங்களிப்புத் தொகைக்கான ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், செப்.11 முதல் 14-ம் தேதி வரை மத்திய அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை என்பதால், ஓய்வூதியப் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தங்கள் ஓய்வூதியத் தொகை வரவு வைக்கப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
