நர்சிங் முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! அரசு மருத்துவமனையில் வேலை! கைநிறைய சம்பளம்! வெளியான ஆர்டர்

திண்டுக்கல்: அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”தேசிய நல வாழ்வு குழுமத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக செவிலியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட நலச்சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

மேற்காணும், தற்காலிக செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிகளுக்குரிய வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் இதர தகவல்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இணையதளம் (Dindigul.nic.in) மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் உரிய படிவத்தில், கல்வித்தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 25.09.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர் / செயற் செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) மீனாட்சிநாயக்கன்பட்டி அஞ்சல், திண்டுக்கல்-624001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.