அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு, தன்னுடைய தந்தை கங்கை அமரன் நடித்திருப்பது பற்றியும், விஜய் – அஜித் லண்டனில் சந்தித்திருப்பது பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசுகையில், “எங்க அப்பா வழக்கமாவே கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்ணுவாரு, ஆனா இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. உண்மையிலேயே இதுக்கு இயக்குநருக்குதான் வாழ்த்து சொல்லணும்.
ஏன்னா, அப்பாகிட்ட இருந்து வேலை வாங்குறது ரொம்பவே கஷ்டமான விஷயம். அதை ரொம்ப அழகா இயக்குநர் செய்திருக்காரு. நானே எங்க அப்பாவை இந்த மாதிரி பார்த்ததே இல்லை. படம் தொடங்கி கொஞ்ச நேரத்துலயே ‘துரைராசு’ கேரக்டராதான் அவர் தெரியுறாரே தவிர, அந்த இடத்துல கங்கை அமரன் தெரியவே மாட்டாரு.
இயக்குநரின் எழுத்தும், அவர் எல்லாரையும் வேலை வாங்கிய விதமும்தான் இதற்கு முக்கியக் காரணம். படம் பார்த்துட்டு உண்மையிலேயே நான் ரொம்ப அழுதுட்டேன்” என்றவர், விஜய் – அஜித் லண்டனில் சந்தித்துக் கொண்டது பற்றி, “இன்னைக்கு அப்பாவும், தர்ஷனும் சேர்ந்து நடிக்கிற ‘லெனின் பாண்டியன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்.
விஜய் சாரையும் – அஜித் சாரையும் சேர்த்து நான் நிறைய முறை பார்த்திருக்கேன். இந்த விழாவில் கண்டிப்பா கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் லண்டன் போகாம இங்கேயே இருந்துட்டேன்.

ஒரு ரசிகனா எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. ஏன்னா, ரெண்டு பேருக்கும் இடையே பெரிய அளவில் ரசிகர்களின் போட்டிகள் இருந்தாலும், அவங்களுக்குள்ள ஒரு அழகான நட்பு இருக்கு.
இப்போ நம்ம முதல்வர் விஜய் அவர்கள் தொழிலதிபர் சந்திப்பிற்காக லண்டன் சென்றிருந்தாலும், சரியான நேரத்தில் அங்கு சென்று அஜித்தின் பந்தயத்தைப் பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைப்பதை ஒரு நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன்.
தல மற்றும் தளபதி ரெண்டு பேரை நினைச்சும் எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு!” எனப் பகிர்ந்திருக்கிறார்.
