லண்டன்: லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரின் ஐந்தாவது சுற்றான சில்வர்ஸ்டோன் சுற்றில் ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தில் நிறைவு செய்தது அஜித் குமாரின் குழு. முன்னதாக, இந்த பந்தயத்தை முதல்வர் விஜய், கொடியசைத்து தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகரும், ரேஸருமான அஜித் குமார் பங்கேற்றார்.
இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தய சர்க்யூட்டில் இந்த சுற்று நடைபெற்றது. ஸ்பெயின், பிரான்ஸ் (2 சர்க்யூட்), பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரின் முதல் நான்கு சுற்றுகள் நிறைவடைந்தன. இந்நிலையில், இந்த தொடரின் ஐந்தாம் சுற்று இங்கிலாந்தில் நடைபெற்றது.
இந்த ஐந்தாவது சுற்றில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓட்டுநர் ரோமைன் வோஸ்னைக் உடன் இணைந்து அஜித் குமார் பங்கேற்றார். எல்.எம்.பி3 புரோ/ஏஎம் கேட்டகிரியில் அவர்கள் இதில் பங்கேற்றனர். அஜித் RedAnt by விராஜ் என் பெயரில் அஜித் குமாரின் குழு இந்த பந்தய தொடரில் பங்கேற்றுள்ளது.
சுமார் இரண்டு மணி நேரம் கொண்ட இந்த சுற்றுக்கான பிரதான பந்தயத்தில் ஒட்டுமொத்தமாக ANS Motorsport அணி முதலிடம் பிடித்தது. அஜித்தின் குழு வெற்றியாளரை காட்டிலும் மூன்று லேப்கள் பின்தங்கிய நிலையில் பந்தயத்தை நிறைவு செய்தது. இதன் மூலம் இந்த சுற்றில் ஒட்டுமொத்தமாக 38-வது இடம் பிடித்தது அஜித் குழு.
அவரது குழு அதிகபட்சமாக மணிக்கு 145.7 கிலோ மீட்டர் வேகத்தில் கார் பந்தயத்தில் சீறி பாய்ந்தது. அதனால் இந்த சுற்றில் அவர்கள் குழுவுக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தய தொடரில் ஒட்டுமொத்தமாக 21-வது இடத்தில் அவரது குழு உள்ளது. இந்த தொடரின் கடைசி சுற்று வரும் அக்டோபர் மாதம் போர்ச்சுகல் நாட்டில் நடைபெற உள்ளது. இதே தொடரில் அஜித் குழு சார்பில் எல்.எம்.பி3 கேட்டகிரியில் ஆதித்யா படேல் மற்றும் நரேன் கார்த்திகேயன் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதல்வர் விஜய், பிரிட்டன் நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச தரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதையொட்டிய முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் சர்வதேச பந்தய சர்க்யூட்டை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
