வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மனம் திருந்தினாரா மாயாவதி?

லக்னோ: ‘குடும்ப அரசியலுக்கு என் கட்சியில் இடம் இல்லை’ என தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.,) தலைவர் மாயாவதி, தனது உடன் பிறந்த சகோதரரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த் மற்றும் இஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.

​உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​பி.எஸ்.பி., நிறுவனர் கன்சிராம் வழியில் குடும்ப அரசியலுக்கு எதிராக எப்போதுமே நான் உறுதியாக நின்று வருகிறேன். என் இளைய சகோதரர் ஆனந்த் குமார் மட்டுமே எனக்கு உதவியாக கட்சியில் செயல்பட்டு வருகிறார். ஆனால், இதை சாதகமாகப் பயன்படுத்தி அவரது மகன்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க முடியாது.

​எனவே, ஆனந்த் குமாரின் மகன்களான ஆகாஷ் ஆனந்த், இஷான் ஆனந்த் ஆகிய இருவருக்கும் இனி கட்சியில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய பொறுப்புகளும் கொடுக்கப்படாது. இதுவே எனது கடைசி முடிவு மற்றும் சபதம். எதிர்காலத்தில் இவர்களது வாரிசுகளுக்கும் கட்சியில் இடமில்லை.

​சகோதரர் ஆனந்த் குமாருக்கு கட்சிப் பணிகளில் உதவி தேவைப்பட்டால், சட்டம் படித்து வரும் அவரது மகள் தீபிகா ஆனந்தின் உதவியை நாடலாம். அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த விசுவாசமான கட்சித் தொண்டர் ஒருவருக்கு அந்தப் பொறுப்பை வழங்கலாம். கட்சியைக் காட்டிலும் தனிப்பட்ட பாசத்திற்கு முன்னுரிமை அளிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source link