தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் திறக்கப்பட்டு காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது.
இந்த நிலையில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே நேரம் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் மழை இல்லாததால் கடந்த சில மாதங்களாக அணைக்கு நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
