BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" – மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று.

மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே, வளர்ச்சியும் சுற்றுச்சூழலும் வெவ்வேறு அல்ல.

அவை ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை என்ற நம்பிக்கையை இந்தியா கொண்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பிலும் கூட, மனித வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சமநிலையை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

இதுவே நீடித்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைவதோடு, எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகவும் விளங்குகிறது” என்று பேசியுள்ளார்.

மோடி
மோடி

மேலும், உலக அளவில் தற்போது உள்ள சூழல் குறித்துக் கூறும்போது…

“இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய மற்றும் பரவலான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

நோய்த் தொற்றுகள், காலநிலைப் பேரிடர்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முடக்கங்கள் ஆகியவை தற்போது இருக்கின்றன. இன்று உலகம் ஒருங்கிணைந்ததாக இருக்கிறது.

அதனால், எந்தவொரு நெருக்கடியும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. எனவே, பிரிக்ஸ் அமைப்பிற்குள் சவால்களை எதிர்கொள்ளும் மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கு நாம் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

அதேபோல், சவால்களை உடனுக்குடன் கண்டறிவதும், அவற்றுக்குத் தயார்நிலையில் இருப்பதும், உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் மிகவும் அவசியமாகும்.

இந்த அணுகுமுறையின் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்கும் ‘பிரிக்ஸ் ஒருங்கிணைந்த முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு’ குறித்துப் பொதுக்கருத்து எட்டப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் மேலாண்மைக்காக ‘முன்கூட்டிய எச்சரிக்கை தரவு ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களும்’ உருவாக்கப்பட்டுள்ளன” என்று பேசியுள்ளார்.

Source link