நாளை விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார் சிலை வாங்க, பூஜை செய்ய, கரைக்க நல்ல நேரம் எது?

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் விநாயகரை நம் வீட்டில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் எந்த நேரத்தில் விநாயகரை கரைக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலுக்கு ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் விநாயகப் பெருமானை முழு மனதுடன் பூஜித்து விரமிருந்து வழிபட்டால் கோயிலுக்கு சென்று வழிபட்ட நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

அந்த வகையில் முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அதாவது நாளை கொண்டாடப்படுகிறது. காலை 8.41 மணிக்கு சதுர்த்தி தி தொடங்கி அடுத்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி காலை 9.22 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது.

செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியாகிய இன்றைய தினம் சிலை வாங்குவதென்றால் மாலை 3.10 மணி முதல் 4.20 மணி வரை அல்லது மாலை 6 மணிக்கு மேல் வாங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை நாளை காலை சிலை வாங்குவதென்றால் காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை சிலை வாங்கலாம்.

விநாயகர் சதுர்த்தியான நாளை காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரையும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாலை அல்லது இரவு நேரம் என்றால் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை பூஜை செய்யலாம். சந்திரன் உதித்த பிறகு மாலை நேரத்தில் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது.

பிள்ளையாருக்கு பிடித்த எள் உரும்டை, கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை செய்யலாம். இல்லாவிட்டால் பால், தேன், அவல், பொரி கடலை, வாழைப்பழத்தையும் கரும்பையும் வைத்து வழிடலாம்.

களிமண் சிலை கிடைக்காதவர்கள் வீட்டிலேய மஞ்சள் அல்லது பச்சரிசி மாவினால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம். பிள்ளையாருக்கு ஆடம்பர பொருட்களை விட அருகம்புல்லை வாங்கி வைத்து விநாயகர் அகவல் சொல்வது சிறப்பானது.

திங்கள்கிழமை சிலை வாங்கினால் செப்டம்பர் 16ஆம் தேதி புதன்கிழமை காலை 9.10 மணி முதல் 10.20 மணி வரை கரைக்கலாம்.

செவ்வாய்க்கிழமை விட்டுவிட்டு வியாழக்கிழமை செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் அல்லது காலை 10.45 மணி முதல் மதியம் 1 மணிக்குள் கரைக்கலாம்.

பிள்ளையார் சிலைகளை நீர் நிலைகளில்தான் கரைக்க வேண்டும். கரைப்பதற்கு நீர் நிலை இல்லாதவர்கள் தங்கள் வீட்டு பக்கெட்டுகளில் தண்ணீரில் கரைத்து பிறகு அந்த மண்ணை பூத்தொட்டிகளுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.