தனியாக தொங்கிய பெண்ணின் மண்டை ஓட்டு தோல்.. ராட்டினத்தில் சிக்கிய முடியால் விபரீதம்

மும்பை: மகாராஷ்டிராவில் கோவில் திருவிழாவின்போது உற்சாகமாக பெண் ஒருவர் ராட்டினம் சுற்றினார். அப்போது அவரது முடி ராட்டினத்தில் சிக்கியதால் அவரது மண்டை ஓட்டு தோல் உரிந்து ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டம் மகாகான் தாலுகாவில் உள்ள கிராமத்தில் புனிஸ்வர் மகாதேவ் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ‘தன்ஹா போலா’ திருவிழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த திருவிழா ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே நடக்கும்.அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் திருவிழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என்று பல ஆயிரம் பேர் குவிந்திருந்தனர்.

இந்த திருவிழாவிற்கு பல்சாவாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பாலி மரோதி என்ற 25 வயது இளம்பெண் சென்றார். இவர் திருவிழாவில் ராட்டினம் சுற்ற விரும்பினார். இதையடுத்து அவர் ராட்சச ராட்டினத்தில் ஏறி அமர்ந்தார். ராட்டினம் வேகமாக சுற்றியது. ராட்டினத்தில் உற்சாகமாக அமர்ந்து இருந்தார் பாலி மரோதி.

அப்போது பாலி மரோதியின் தலைமுடி காற்றில் பறந்ததோடு, அவரது இருக்கையின் பின்புறத்தில் இருந்த ‘பேரிங்’கில் சிக்கியது. இதனால் அவர் அலறினார். ராட்டினம் வேகமாக சுற்றியதால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. அதற்குள் அவரது தலையின் மேற்புற தோல் தனியாக முடியுடன் பிரிந்தது. தலையில் இருந்து ரத்தம் சொட்டியது. பாலி மரோதி அலறி துடித்தார். ராட்டினம் போராடி நிறுத்தப்பட்டது.

உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் சுனில் அம்புரி, கான்ஸ்டபிள்சுகாஷ் காய்டி மற்றும் திருவிழாவிற்கு வந்தவர்கள் பாலி மரோதியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவிழாவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.