“அரசு விடுமுறை என்றால் அரசாங்கத்திற்கே விடுமுறை கிடையாது”.. தவெக அரசை விளாசிய திமுக சரவணன்!

சென்னை: “அரசு விடுமுறை என்றால், அரசாங்கத்திற்கு விடுமுறை கிடையாது.” என கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தது குறித்து திமுகவின் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர். செப்டம்பர் 14 திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பயணிகள் அதிகளவில் ஊருக்குச் செல்வதற்காக கிளாம்பாக்கத்திற்குச் சென்றனர். இதில் பலரும் முன்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.

முன்பதிவு செய்த பயணிகளின் பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக கூறி, மாற்று பேருந்துகளையும் இயக்காமல் அலைக்கழித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பேருந்துகளில் விடுமுறை கால கூட்ட நெரிசலுக்கு தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று திமுக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை பேட்டி அளித்துள்ளார்.

“கிளாம்பாக்கத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவெக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினர். ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை தொடர்கிறது. தொடர் விடுமுறையையொட்டி உரிய பேருந்து ஏற்பாடுகளை தவெக அரசு செய்யவில்லை.

இதற்கு முன்பு திமுக அரசு பண்டிகைகால விடுமுறைகளின்போது மானிட்டரிங் கமிட்டி அமைத்து, அமைச்சராக இருந்த சிவசங்கர் ஆய்வு செய்தார். இப்படியான விஷயங்கள் எல்லாம் இப்போது நடக்கவே இல்லை. போக்குவரத்துத் துறை அமைச்சரே அங்கு வரவில்லை.

இதனால் பாதிக்கப்படப்போவது என்னவோ சாமானிய மக்கள் தான். இந்த தவெக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறத். அரசு விடுமுறை என்றால், அரசாங்கத்திற்கு விடுமுறை கிடையாது. அரசாங்கம் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு நீண்ட விடுமுறை என சென்றுவிட்டார்கள்” என சரவணன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.