சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளில் ஏசி, குளிர்பதன சாதனங்கள் மற்றும் மின்சார உபயோகங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையின் கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு நீடித்ததாக கூறப்படுகிறது.
நீண்ட நேர மின்தடை ஏற்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மட்டுமல்லாமல் மதுரை போன்ற நகரங்களிலும் இதே நிலை நீடிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மின்வெட்டு அதிகரித்துவிட்டதாக சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
“எப்போது மின்சாரம் போகும், எப்போது வரும் என்று தெரியாத நிலை உள்ளது” என பலரும் வேதனை தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் தடைபடுவதால் பெண்கள் கூட வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். வேலைக்கு செல்லும் ஊழியர்களும் தூக்கமின்மையால் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். மின்வெட்டு குறித்த புகார்களை தெரிவிக்க மின்வாரிய அலுவலகங்களை தொடர்புகொள்ள முயன்றாலும் சரியான பதில் கிடைப்பதில்லை என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை வழக்கமாக வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் ஏசி, ஃபேன் உள்ளிட்டவற்றின் பயன்பாடு காரணமாக மின்தடை ஏற்பட்டதாக மின்வாரிய அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம். அதில்,” தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.
மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என கூறியுள்ளது.
