சென்னை: தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை இரவு 11 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், சென்னை தாம்பரத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை முடிவடைய உள்ளதால் சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப ஆயத்தமாகி வருகிறார்கள். திங்கள் கிழமை நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, உடன்குடி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல் என தென்மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் மற்றும் பேருந்துகள் அனைத்திலும் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.
இதனால், சிறப்பு ரயில் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்த்த நிலையில், பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஒன்வே ஸ்பெஷல் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:
வண்டி எண் 06050 நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும். இந்த ரயில் நாளை (செப். 14 திங்கள் கிழமை) நாகர்கோவில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10.45 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயில் வள்ளியூர் வழியாக நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு வந்து சேரும். நெல்லையில் 5 நிமிடங்கள் நிற்கும் இந்த ரயில் 12.20 மணிக்கு புறப்படும். கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு அதிகாகை 5.40 மணிக்கு வந்து சேரும்.
திருச்சியில் இருந்து 5.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சாலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு காலை 10.45 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும். ரயில் நின்று செல்லும் ஸ்டேஷன்களின் விவரம் மேலே தரப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 15 ஸ்லீப்பர் பெட்டிகள், சேர் கார் பெட்டிகள்-3, 2 லக்கேஜ்& பிரேக்வேன்ஸ் என மொத்தம் 20 பெட்டிகள் இருக்கும்.
சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை காரணமாக தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படன. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ரிசர்வ் டிக்கெட்டுகள் அனைத்தும் காலியாகிவிட்ட நிலையில், ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் அனைத்தும் நிரம்பி வழிந்தன. தனியார் ஆம்னி பஸ்களோ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு டிக்கெட்டு விலையை பலமடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்த்தன.
அதிகப்படியான டிக்கெட் வசூலித்து விதிமீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவே பயணிகள் தொடர்ந்து குற்றசாட்டு முன்வைத்தனர். நாளையும் தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்து ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், பயணிகள் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
