தெற்கிலிருந்து உதிக்க போகும் சூரியன்..பிரதமர் ரேஸில் முக ஸ்டாலின்? சத்தமில்லாமல் உருவாகும் 3வது அணி?

சென்னை: இந்திய அளவில் பாஜக வலுவாக இருக்கும் நிலையில், காங்கிரஸின் மாறுபட்ட முடிவுகளை எடுத்து வருவதால் மாநில கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. இந்த நிலையில் பாஜகவால் பழிவாங்கப்பட்டு, காங்கிரசின் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முன்னெடுப்பை தமிழகத்தில் இருந்து துவக்கி இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என்கின்றனர்.

2014, 2019 மக்களவைத் தேர்தல்களை விட 2024 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு கடும் பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றாலும் தனிப் பெரும்பான்மை இன்றி சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் ஆதரவோடு தான் பிரதமராகி இருக்கிறார்.

அதே நேரத்தில் வலுவான எதிர்க்கட்சியாக மாற முடியாமல் காங்கிரஸ் தவிர்த்து வருகிறது. தேசிய அளவிலான கட்சியாக இருந்தாலும் மாநிலக் கட்சிகளுடன் போட்டி போட முடியாத அளவுக்கு தான் காங்கிரஸின் நிலைமை இருக்கிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே என தலைமை மாறினாலும் கட்சியை மீட்டெடுக்க முடியவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் புலம்புகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு தேர்தலுக்குப் பிறகு அவர்களை கழட்டி விடுவது காங்கிரசின் வழக்கமாகிவிட்டது.

டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என பல கட்சிகளுடன் மோதல் போக்கை ஈடுபட்டு வந்தாலும், இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்கிறோம் என காங்கிரஸ் கூறுவதும், சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் பல்வேறு கட்சிகளும் அந்த கட்சி மீது அதிருப்தியில் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி வரும் நிலையில் அதன் வளர்ச்சியை தடுக்கவும் காங்கிரஸின் இந்த அரசியல் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டும் வகையில் மூன்றாவது அணியை அமைப்பதற்காக ஆலோசனை தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் கட்சிகளை புதிய அணிக்கு கொண்டு வருவதற்கான காய்களை நகர்த்த திமுக திட்டமிட்டு இருப்பதாக சொல்கின்றனர்.

மேலும் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை முன்னிறுத்தலாமா என்ற ஆலோசனையும் ரகசியமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக டெல்லியில் இந்த பேச்சுவார்த்தைக்கும், அதன் தொடர்ச்சியாக தான் மும்பையில் உத்தவ் தாக்கரேவை திமுக துணை பொது செயலாளர் முக ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி சந்தித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

தொகுதி வரையறை தொடர்பாக பேசப்பட்டதாக சொல்லப்பட்டாலும் மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிதான் இந்த பேச்சு வார்த்தை என்கின்றனர். உத்தவ் தாக்கரே மட்டும் அல்லாமல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸின் சரத் பவர் அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, ஜார்கண்ட் சர்க்கார் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரளா ஆகிய கட்சிகள் இந்த பட்டியலில் உள்ளதான்.

இதுமட்டுமல்லாமல், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், ஏஐஎம்ஐஎம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜன்சக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளை சேர்க்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை பிரதமர் வேட்பாளர் தொடர்பாக பிரச்சனை எழுந்தால் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அந்த கட்சி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்ற முதற்கட்ட வாக்குறுதியோடு பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக சொல்லுகின்றனர்.