யாருமே எதிர்பார்க்கல.. பக்காவாக காய் நகர்த்திய திமுக! தேசியளவில் உருவாகும் 3வது அணி.. எல்லாமே மாறுதே

சென்னை: இந்தியா கூட்டணியில் திமுக மிக முக்கிய அங்கம் வகித்து வந்தது. இருப்பினும், தமிழ்நாடு தேர்தலுக்கு பிறகு அங்கு நடந்த அரசியல் மாற்றங்களால் ஒரு திமுக இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், திமுக ஒரு பிரம்மாண்ட 3வது அணியை உருவாக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி சமீபத்தில் மகாராஷ்டிரா சென்றிருந்தார். அங்கு அவர் சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இதுவே இப்போது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. வெளியே இப்படி சொன்னாலும் கூட 2029 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து திமுக கார் நகர்த்துவதாகவும் ஒரு மாபெரும் 3வது அணியை உருவாக்கும் முயற்சியை திமுக இப்போதே ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சிவசேனா (உத்தவ்) எம்பி அனில் தேசாய், எம்எல்சி மிலிந்த் நார்வேகர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொகுதி மறுவரையறை, இந்தியா கூட்டணி, எதிர்க்கட்சிகளில் பிராந்திய கட்சிகளின் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டதாக சிவசேனா தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டது திமுக – காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெக உடன் கூட்டணி அமைந்தது. இது திமுகவினருக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

இதன் தாக்கம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுக எம்பிக்கள், காங்கிரஸ் எம்பிக்களுடன் அருகருகே அமரும் வகையில் இருந்த நாடாளுமன்ற இருக்கை அமைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி, இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார். திமுக எம்பிக்களுக்கு தனி இருக்கை ஒதுக்கினால், அவர்கள் தங்களது நாடாளுமன்றப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில்தான் உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2029 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு 3வது அணியை உருவாக்குவதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

இடதுசாரி கட்சிகள், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு தரப்புடனும் இணைந்து செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

அதேபோல் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களுக்கும் காங்கிரஸுடன் பல்வேறு விவகாரங்களில் முரண்பட்டே இருக்கிறார்கள். இந்த கட்சிகள் எல்லாம் ஒரே அணிக்குள் கொண்டு வந்து தனியாக ஒரு கூட்டணியை உருவாக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும், இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் மெதுவாக தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது கனிமொழி – உத்தவ் தாக்கரே சந்திப்பு என்பது தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என கூறப்பட்டாலும், அதையும் தாண்டி 3வது அணி குறித்தே ஆலோசனை நடந்திருக்கும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் சூழல், எதிர்க்கட்சிகளில் பிராந்திய கட்சிகளின் பங்கு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக சிவசேனா தரப்பு தெரிவித்திருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.