இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. தவெக கூட்டணிக்கு பாதிப்பா? திருமாவளவன் பதில்

சிவகாசி: சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.இப்படி போட்டியிடுவதால் தவெகவிற்கு எதிரான நிலைப்பாடு என்றோ.. திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருத தேவையில்லை என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெளிவுபட கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்தன.

இடதுசாரிகள் எடுக்கும் முடிவை ஒட்டியே விசிகவின் நிலைப்பாடு இருக்கும் என கடந்த காலத்தில் திருமாவளவன் பேசியிருந்த நிலையில், தவெக தலைமயிலான மதசார்பற்ற சமூக நீதி கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு விசிகவின் நிலைப்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில், சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

திருமாவளவன் கூறியதாவது:- கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு. நாங்கள் தனித்தே இயங்குவோம் என்று தெரிவித்து வருகிறார்கள். இப்போதும் அவர்கள் தெளிவுபட கூறியிருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதில் எந்த தயக்கமும் இல்லை. ஐயமும் இல்லை. ஆனால், இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

இப்படி போட்டியிடுவதால் தவெகவிற்கு எதிரான நிலைப்பாடு என்றோ.. திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருத தேவையில்லை. ஏனென்றால் இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைப்பதற்கான ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இல்லை. இதைக்கொண்டு ஆட்சியை தீர்மானிக்க போவது இல்லை. எனவே இந்த தேர்தலை நாங்கள் தனித்து சந்திக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இது அவர்களுக்கான உரிமை, சுதந்திரம். எந்த வகையிலும் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன்” என்றார்.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது திருமாவளவன் கூறியதாவது:- “30 ஆண்டு காலம் அரசியல் களத்தில் நாங்கள் தாக்குபிடித்த போதும், திமுகவிடம் ஒரு அமைச்சரவையை பெற்று இருக்க முடியுமா? அதில் என்ன பயன் என்பது வேறு.. பெற முடிந்ததா? இன்று காலம் ஒரு கட்டளை இட்டுள்ளது. விஜய்யே விரும்பி தந்தாரா இல்லையா என்பது வேறு..

ஆனால் காலம் தந்து இருக்கிறது. ஒரு கூட்டணி ஆட்சி முறையை உருவாக்கியுள்ளது. அதுதான் விசிகவின் வேட்கை. இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான் அதை எவராலும் மறுக்க முடியாது என்ற நிலையை உறுதிப்படுத்தும் வகையில்தான் வன்னி அரசுவை அமைச்சரவையில் சேர்த்தோம்” என்றார்.