கோவை சாய்பாபா காலனி மேம்பாலம்.. மேலே ரெடி.. கீழே என்னாச்சு? 31ம் தேதி காலக்கெடுவும் முடிஞ்சாச்சு

கோவை: கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் திறந்து போக்குவரத்து தொடங்கிவிட்டது. ஆனால் பாலத்துக்கு கீழே அமைக்கப்பட்டு வரும் சர்வீஸ் சாலை பணிகள் மட்டும் இன்னும் முடியாமலேயே உள்ளது.. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 31-ம் தேதி காலக்கெடும் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள பணிகள் எப்போது நிறைவடையும் என்ற கேள்வி பொதுமக்களிடம் பரவலாக எழுந்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாய்பாபா காலனி பகுதியில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. அழகேசன் சாலை முதல் ஈரு கம்பெனி ஜங்ஷன் வரை சுமார் 1.2 கி.மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்ட இந்த பாலத்துக்கு ரூ.71.05 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மேம்பாலம் போக்குவரத்து

கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே நடந்து வந்த பணிகள் முடிந்து, கடந்த ஜூலை 20-ம் தேதி மேம்பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதால் மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்ல முடிகிறது. ஆனால் பாலத்துக்கு கீழே உள்ள சர்வீஸ் சாலையின் பணிகள் மட்டும் இன்னும் முழுமையாக முடியவில்லை.

சர்வீஸ் சாலை அமைக்கும் பணியில் சில இடங்களில் நிலத்துக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய்கள் மற்றும் மின்சார கேபிள்களை மாற்றி அமைக்க வேண்டியிருந்தது. இந்தப் பணிகளை கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்தப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்துடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பும் சரியாக இல்லாததால் சர்வீஸ் சாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பஸ் சிக்கியது

இதனால், அந்தப் பாதையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக, குழாய்கள் அமைப்பதற்காக சாலை சில இடங்களில் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தோண்டப்பட்ட பகுதியில் அரசு பஸ் ஒன்று சிக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் மீதமுள்ள பணிகளை சீக்கிரமாக முடித்து, சர்வீஸ் சாலையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வீஸ் சாலை பணிகளை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க ஏற்கனவே பிளான் செய்யப்பட்டது.. ஆனால் அந்த காலக்கெடு முடிந்த பிறகும் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்கிறார்கள்.. குறிப்பாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், சர்வீஸ் சாலைக்கு இறுதியாக தார் போடும் பணியும் மிச்சமிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும் கான்ட்ராக்டர், பணிகளை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் 6 மாத கால அவகாசம் கிடைக்க வாய்ப்பு குறைவு என்றும், 3 மாத கால அவகாசம் கிடைக்கலாம் என்றும் நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கோவை மக்கள் எதிர்பார்ப்பு

மேம்பாலம் மட்டும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், அதற்கு கீழே உள்ள சர்வீஸ் சாலை இன்னும் முழுமையாக தயாராகவில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடும் முடிந்துவிட்டது. இதனால் மீதமுள்ள பணிகள் எப்போது முடிந்துவிடும் என்றே தெரிகிறது.

மொத்தத்தில், மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகும் அதன் கீழ் நடைபெறும் பணிகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடு முடிந்துள்ள நிலையில், சர்வீஸ் சாலை பணிகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது தெரியவில்லை.. கூடுதல் கால அவகாசம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட பிறகு, பணிகள் வேகமெடுக்குமா என்றும் தெரியவில்லை.. கோவை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்…!!!