மும்பை: 2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மீதமுள்ள மாநிலங்களிலும் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நமது நாட்டில் இப்போது கிரிமினல் சட்டங்கள் என்பது அனைவருக்கும் ஒன்று தான். ஆனால், சிவில் சட்டங்கள் என வரும்போது அது ஒவ்வொரு மதத்திற்கும் வேறுபடுகிறது. இருப்பினும், இந்த நிலையை மாற்றி, அனைத்து மதங்களுக்கும் ஒரே பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை பாஜகவின் நிலைப்பாடாக இருக்கிறது.
இதற்கிடையே 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். மும்பையில் சேவா சங்கல்ப் அபியான் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “பல மாநிலங்களில் ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். 2029ஆம் ஆண்டுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்யும் அனைத்து 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் ஆட்சியில் உள்ளது. டெல்லி, மேற்கு வங்கம், அசாம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், உத்தரப் பிரதேசம் என 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அதில் உத்தரகாண்ட், குஜராத் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர தேவையான பணிகள் நடந்து வருகிறது. வரைவு விதிகளை அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் மீதமுள்ள மாநிலங்களிலும் 2 ஆண்டுகளுக்குள் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அவர் கூறியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நாடு முழுவதும் 30 நாட்கள் சேவா சங்கல்ப் அபியான் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அமித் ஷா அறிவித்தார். மோடி பிரதமராகவும் குஜராத் முதல்வராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் பணியாற்றியதை குறிக்கும் வகையில் இந்த தொடர் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாஜக அரசின் சாதனைகளையும் அமித் ஷா பட்டியலிட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது, அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது, முத்தலாக் நடைமுறை ரத்து செய்யப்பட்டதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைத்தது என பாஜக பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மேலும், நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், “2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய அரசியல் என்பது ஊழல், சாதியம் மற்றும் வாரிசு அரசியலால் நிறைந்து இருந்தது. ஆனால் அதற்கு பிறகு அரசியல் என்பது பிரச்சினைகளை சரி செய்வது முதல், நாட்டை முன்னேற்றுவதை நோக்கி நகர்ந்துள்ளது. வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கை என எதுவாக இருந்தாலும் இந்திய நலன்களுக்கு முன்னுரிமை அளித்தே முடிவுகளை எடுக்கிறோம்” என்றார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “ஜனநாயகத்தில் பல்வேறு விவகாரங்களில் மக்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அந்த எதிர்ப்புகளை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. பாஜக ஆட்சியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம். எமர்ஜென்சியை அமல்படுத்தி நாட்டை ஆள முடியாது. அது காங்கிரஸின் கலாச்சாரம்; எங்களுடையது அல்ல” என காங்கிரஸை சாடினார்.
