இடைத்தேர்தல் : இ.பி.எஸ். வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சி. சீனிவாசன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு கே.பி. முனுசாமி தலைமையிலும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குத் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையிலும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னதாக அதிமுக சார்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளருமான முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குத் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு 12வது வார்டு முன்னாள் உறுப்பினருமான பானுமதி வேட்பாளராக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Source link