அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த தேர்தல் ஆளும் குடியரசு கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குடியரசு கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பெரியவர்களுக்கு இந்திய மதிப்பில் 4.7 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. அப்படியென்ன முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வருகிறது என்ற கேள்வி எழலாம்.
அமெரிக்காவில் நவம்பர் இடைத்தேர்தல்
அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் என்பது 4 ஆண்டுகள். இதன் இரண்டாவது ஆண்டில் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும். மக்களவையில் மொத்தமுள்ள 435 இடங்கள், மேலவை மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்கள், 36 மாநில ஆளுநர்கள் ஆகிய பதவிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். தபால் வாக்குகள் அதிகம் என்பதால் முடிவுகளை தெரிந்து கொள்ள அடுத்த சில நாட்கள் கூட ஆகலாம்.
ட்ரம்ப் வாக்குறுதி- ரூ.4.7 லட்சம் ஊக்கத்தொகை
இதையொட்டி தற்போது பரப்புரை விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில் 4.7 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை உள்ளிட்ட கவர்ச்சியூட்டும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா என்பது உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நாட்டின் அதிபர் பதவியை வகிப்பது என்பது சர்வதேச அளவில் மிகவும் செல்வாக்கு பெற்ற ஒன்று. உலகப் பொருளாதாரம், பதற்றமூட்டும் போர்ச்சூழல், வர்த்தகப் போக்குவரத்து, தொழில் வளர்ச்சி எனப் பல விஷயங்களை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கிறது.
உலக நாடுகளை அலறவிடும் ட்ரம்ப்
அதிலும் தற்போதைய அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகள் பல்வேறு நாடுகளை நெருக்கடியில் தள்ளி வருகிறது. எனவே இவர் இடத்தை வேறு யாராவது நிரப்ப மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மறுபுறம் தனது ஆட்சியை தக்க வைக்க டொனால்ட் ட்ரம்ப் காய் நகர்த்தி வருகிறது. குடியரசு கட்சி தொடர்ந்து ஆட்சி கட்டிலில் இருக்கும் வகையில் வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் நவம்பரில் வரவுள்ள இடைத்தேர்தல் டொனால்ட் ட்ரம்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஜனநாயக கட்சி வென்றால் ட்ரம்பிற்கு நெருக்கடி
ஒருவேளை ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்று நாடாளுமன்றத்தை கைப்பற்றினால் பெரிய சிக்கலாகி விடும். அதன்பிறகு ட்ரம்ப் இயற்றும் புதிய சட்டங்களை அமல்படுத்த முடியாது. அந்நாட்டு அரசுக்கு தேவையான வரவு செலவு திட்டங்களை எளிதில் நிறைவேற்றவும் முடியாது. அடுத்ததாக 2028ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கும். இரண்டு கட்சிகளில் யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை தெரிந்துவிடும்.
இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா குடியரசு கட்சி?
உக்ரைன், ஈரான் மீதான போர் நடவடிக்கைகள், வர்த்தக கொள்கைகள் தொடர்பாக அமெரிக்க அரசு முடிவுகள் எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் என்பது மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால் நவம்பர் இடைத்தேர்தல் என்பது குடியரசு கட்சி, டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Source link
