கலிபோர்னியா சைஃபன் தொழில்நுட்பம்
அணை முழுவதும் நிரம்பியதும் மின்சாரம், மோட்டார், கிரேன் என எதுவுமே இல்லாமல் தானாகவே உபரி நீரை வெளியேற்றும் தொழில்நுட்பம் கொண்ட அணையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டத்தில் அமைந்துள்ள சரளா சாகர் திட்டம், இதுபோன்ற அரிய தொழில்நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.கலிபோர்னியா சைஃபன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த அணை, இந்தியாவில் மட்டுமின்றி ஆசிய கண்டத்திலேயே முதல் சைஃபன் தொழில்நுட்பத் திட்டமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
சரளா சாகர் அணையின் வடிவமைப்பு
சரளா சாகர் திட்டத்தின் முக்கிய சிறப்பு அதன் சைஃபன் அமைப்புதான். அணையில் மொத்தம் 17 ஹூட் சைஃபன்களும், 4 பிரைமிங் சைஃபன்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து அபாய நிலையை எட்டும்போது, பணியாளர்கள் மதகுகளைத் திறந்து உபரி நீரை வெளியேற்ற வேண்டும். ஆனால் சரளா சாகரில் நீர் முழு கொள்ளளவை எட்டியவுடன், காற்றழுத்தம் மற்றும் வெற்றிட அழுத்தத்தின் அடிப்படையில் சைஃபன் அமைப்புகள் தானாகவே செயல்படத் தொடங்குகின்றன.
இதனால் மின்சாரம் பயன்படுத்தாமலும், மனித தலையீடு இல்லாமலும் உபரி நீர் கீழ்ப்பகுதிக்கு வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் குறைந்ததும் சைஃபன்களும் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொள்கின்றன.
மின்சாரம் மற்றும் மதகு இயக்கச் செலவு இல்லாமல் செயல்படும் வகையில் உருவாக்கம்
சரளா சாகர் அணையை உருவாக்கும் எண்ணம் அப்போதைய வனபர்த்தி சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. வனபர்த்தியின் கடைசி ஆட்சியாளரான ராஜா ராமேஸ்வர ராவ், தனது தாயார் சரளா தேவியின் நினைவாக இந்தத் அணையை உருவாக்க முடிவு செய்தார்.
இதற்கான கட்டுமானப் பணிகள் 1949-ல் தொடங்கி, 1959-ல் நிறைவடைந்தன. அப்போது நிஜாம் அரசின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளூர் பொறியாளர்கள் இந்தத் திட்டத்தை உருவாக்கினர்.
சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன்பே மின்சாரம் மற்றும் மதகு இயக்கச் செலவு இல்லாமல் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் அணை, அக்கால பொறியியல் திறமைக்கு சிறந்த சான்றாக பார்க்கப்படுகிறது.
விவசாயத்துக்கும் சுற்றுலாவுக்கும் முக்கியத்துவம்
கிருஷ்ணா நதியின் துணை நதியான வாகு மீது கட்டப்பட்டுள்ள சரளா சாகர் திட்டத்தின் மூலம் சுமார் 4,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மழைக்காலத்தில் அணை முழுமையாக நிரம்பும்போது, சைஃபன்கள் வழியாக நீர் வெளியேறும் காட்சி பார்ப்பதற்கு அருவியைப் போல காட்சியளிக்கிறது.
இதனால் வனபர்த்தி மட்டுமின்றி முன்னாள் மகபூப்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஹைதராபாத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
பல ஆண்டுகளாக எந்தவித பெரிய மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் சரளா சாகர் திட்டம், நீர்மேலாண்மை மற்றும் பொறியியல் துறையில் அக்காலத்திலேயே பயன்படுத்தப்பட்ட புதுமையான தொழில்நுட்பத்திற்கு இன்றும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.
