வாஷிங்டன்: அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சிஐஏ, வெளியிட்டிருக்கும் ரகசிய ஆவணங்களின்படி 9/11 பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாகவே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் தாக்குதல் லிஸ்டில் இந்தியா இருந்ததாக தெரிய வந்திருக்கிறது.
9/11 இரட்டைக்கோபுர தாக்குதலின் 25ம் ஆண்டு நினைவை ஒட்டி, ஒசாமா பின்லேடன் தொடர்பான 70க்கும் மேற்பட்ட உளவுத்துறை குறிப்புகளை சிஐஏ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதில்தான் இந்த விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன.
கடந்த 1998ம் ஆண்டு ஆக.28ம் தேதியிட்ட அமெரிக்க அதிபருக்கான உளவுத்துறை குறிப்பில் ஒசாமா பின்லேடன் இந்தியா உட்பட பல நாடுகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான், எகிப்து, குவைத், சவுதி, ஏமன், உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளும் இடம் பெற்றிருந்தன.
இந்த ஆவணத்தில் இந்தியாவின் எந்தவொரு குறிப்பிட்ட இலக்கு, தாக்குதல் நடத்த இருந்த தேதி அல்லது அதற்கான துல்லியமான செயல்பாட்டு திட்டங்கள் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அல்கொய்தா அமைப்பு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவம், சுமார் 60 நாடுகளில் உள்ள தனது ஆதரவாளர்கள் மற்றும் பிற குழுக்கள் மூலம் இந்த தாக்குதல்களை நடத்த பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகிய அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலங்களின் போது.. அதாவது 1998 முதல் 2001 வரை, அமெரிக்காவில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை பலமுறை எச்சரித்ததை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அமெரிக்காவுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே உள்ள பகை உலகம் அறிந்ததுதான். இருப்பினும், இந்தியா மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? என்கிற கேள்வி பரவலாக எழுகிறது. இதற்கான காரணம் அறிக்கையில் தெரியவில்லை என்றாலும், சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.
அதாவது அல்கொய்தா தனது செயல்பாடுகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பால் விரிவுபடுத்த விரும்பியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச அளவில் சுமார் 60 நாடுகளில் உள்ள தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரே நேரத்தில் பல நாடுகளில் தாக்குதல் நடத்த பின் லேடன் திட்டமிட்டிருந்தார். இந்தியாவை பொறுத்தவரை காஷ்மீர் மீது பின்லேடனுக்கு ஒரு கண் இருந்தது. காஷ்மீரில் நடந்த அரசியல் மற்றும் தீவிரவாத நகர்வுகளை அவர் மிக உன்னிப்பாக கவனித்து வந்தார். தெற்காசியாவில் தனது இஸ்லாமிய தீவிரவாத கொள்கையை பரப்புவதற்கும், பதற்றத்தை உருவாக்குவதற்கும் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பியதாக சொல்லப்படுகிறது.
