அவங்க தான் பெரிய வேலைய பார்க்கப் போறாங்க! ஆட்டத்தைக் கலைக்கும் கம்யூனிஸ்ட்கள்? யாருக்கு சேதாரம்?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், திடீர் திருப்பமாக தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர. திமுக தவெக, அதிமுக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் நிலையில், 5வது முனை போட்டியாக கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கி உள்ளன. இதனால் திமுகவுக்கு பாதிப்பா? தமிழக வெற்றி கழகத்திற்கு பாதிப்பா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இன்னும் முழுமையாக 6 மாதங்கள் கூட கடக்காத நிலையில் அடுத்த தேர்தலை சந்திக்க இருக்கிறது தமிழகம். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது.

திமுகவும் அதிமுகவும் முறையே 3வது, 4வது இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் 3வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்த்த தமிழக வெற்றி கழகம், முதல் இடத்தை பெற்று ஆட்சியைப் பிடித்தது. தனி பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வராக பதவி ஏற்றி இருக்கிறார் விஜய்.

இந்த கட்சிகள் முதலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பின் திமுக அதிமுக இணைந்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்டதாக தகவல் பரவிய நிலையில் சில அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். குறிப்பாக மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.

தற்போது அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மரகதம் குமரவேல், சத்யபாமா ஒரு மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தரப்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர்.

இதைப் போல மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் விஜய் அரசு மீது தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்திருக்கின்றனர். தாராபுரத்தில் சிபிஎம், மதுராந்தகத்தில் சிபிஐ போட்டியிடலாம் என சொல்லப்படும் நிலையில் நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்த தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவும் நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. இதனால் தொழிற்சங்க ரீதியாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிட்ட ஆதரவு வட்டம் உள்ளது. அதனால் தங்கள் வாக்கு வங்கியை சோதிப்பதற்காக இந்த தேர்தலில் தோழர்கள் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆட்சிக்கு எதிரான மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கி உள்ளதாகவும் சொல்கின்றனர். அதே நேரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தால் தேவையற்ற விமர்சனங்கள் எழும் என்பதால் தான் நேரடியாகவே தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவுக்கு தோழர்கள் வந்திருக்கின்றனர். கடந்த தேர்தலில் விஜயின் மிகப்பெரிய செல்வாக்கையும் மீறி இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மரகதம் குமரவேலுக்கும், சத்யபாமாவுக்கும் இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கும் வெற்றிக்கு ஒரு காரணம் என்கின்றனர். இந்த தேர்தலில் திமுக தவெக இடையே தான் நேரடி போட்டி என சொல்லப்பட்டாலும் இரட்டை இலைக்கு என்று ஒரு தனி செல்வாக்கு இருக்கிறது. அதனால் அதிமுகவை குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனாலும் திமுகவுக்கு இருக்கும் மதச்சார்பற்ற வாக்குகள் சிறுபான்மை வாக்குகள் தொழிலாளர்கள் ஆதரவு போன்ற வாக்கு வங்கிகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் உடைக்க வாய்ப்பு இருப்பதால் திமுகவுக்கு சற்றே பின்னடைவு ஏற்படலாம் என சொல்கின்றனர். மறுபுறம் அரசுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு கம்யூனிஸ்டுகள் போட்டியிடுவது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர். மேலும் எதிர்க்கட்சிகளும் இதனை ஒரு ஆயுதமாகவே தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தலாம்.

கடந்த தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி வாக்கு வித்தியாசம் பத்தாயிரத்திற்குள் தான் இருந்தது. தற்போது கம்யூனிஸ்டுகள் இந்த வாக்கை பிரிப்பதன் மூலம் திமுக தவெக ஆகிய இரு கட்சிகளுக்குமே சேதாரத்தை ஏற்படுத்தலாம். அது எந்த அளவு பெரிய சேதாரமாக இருக்கும் என்பது தேர்தல் முடிவுகளின் போது தான் தெரியும்..