Adequate Onion Availability,வெங்காய விநியோகத்தை விரிவுபடுத்தும் மத்திய அரசு: தமிழ்நாட்டுக்கு 840 டன் ஒதுக்கீடு – central govt dispatching onion stocks to various states 840 tonnes arrived in tamil nadu

பருவகால விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தடையின்றி வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து மூலம் அரசு தனது பஃபர் இருப்பு (Buffer Stock) வெங்காயத்தை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. விலை நிலைப்படுத்தல் நிதித் (PSF) திட்டத்தின் கீழ் NAFED மற்றும் NCCF அமைப்புகள் மூலமாக கடந்த ஆகஸ்ட் 24, 2026 முதல் இந்த வெங்காய விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாசிக்கிலிருந்து இரண்டு கந்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. முதலாவது ரயிலில் 450 மெட்ரிக் டன் வெங்காயம் ஏற்றப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 27 அன்று இரவு டெல்லியை வந்தடைந்தது. இதில் 140 மெட்ரிக் டன் வெங்காயம் வாரணாசி, லக்னோ, சண்டிகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள பங்கு டெல்லி-தேசிய தலைநகர் (NCR) பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இரண்டாவது ரயிலில் 840 மெட்ரிக் டன் வெங்காயம் கொண்டு செல்லப்பட்டு கடந்த ஆகஸ்ட் 31 அன்று சென்னையை வந்தடைந்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ என்ற அடிப்படையில், பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் இந்த வெங்காயத்தை விநியோகிக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், சந்தை நிலவரம் மற்றும் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, முக்கிய நகரங்களுக்குச் சாலை மார்க்கமாக சுமார் 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் விநியோகம் அதிகரிக்கப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 19 நகரங்களில் சில்லறை விற்பனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் பரவலான விநியோகத்திற்காக 30க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. டெல்லி, ஜெய்ப்பூர், ஜம்மு, டேராடூன், சிம்லா, அமிர்தசரஸ், சண்டிகர், கொல்கத்தா, கவுகாத்தி, லக்னோ, வாரணாசி, பாட்னா, போஜ்பூர், ஷெரீப், புவனேஸ்வர், சென்னை, மதுரை, திருச்சூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்கள் இதில் அடங்கும். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் பி.எல். வர்மாவால் லக்னோவில் இந்த சில்லறை விற்பனைத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கிலோ ரூ. 35க்கு வெங்காயம் விற்பனை!

நுகர்வோருக்குக் மலிவான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் NCCF, NAFED, கேந்திரிய பந்தர் கடைகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் கிலோ ரூ. 35 விலையில் வெங்காய விற்பனை தொடர்கிறது. இதுவரை மொத்தம் சுமார் 669 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், e-NAM தளம் மற்றும் இதர ஆன்லைன் சந்தைகள் மூலம் மொத்த விற்பனை முறையில் 223 மெட்ரிக் டன்னும், நாடு முழுவதும் சில்லறை விற்பனை மூலம் 446 மெட்ரிக் டன்னும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் கையிருப்பு விலையைக் கட்டுப்படுத்த உதவும்!

இருப்பு வெங்காயம் வெளியிடப்பட்டதன் மூலம் சந்தையில் விநியோகம் அதிகரித்து வாரணாசி, அமிர்தசரஸ், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை குறைந்துள்ளது. விநியோகம் மேலும் அதிகரிக்கப்படுவதால் விலை நிலைத்தன்மை மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுமார் 3,400 விவசாயிகளுக்கு நேரடியாக ரூ.210 கோடி வழங்கப்பட்டு உரிய காலத்தில் பணம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளை ஆதரிப்பதிலும், நுகர்வோருக்குத் தகுந்த விலையில் வெங்காயம் கிடைப்பதையும் உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. மேலும், ரயில்கள் மூலம் பெருமளவில் வெங்காயம் கொண்டு செல்லப்படும் போது கசிவுகள் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைத் தவிர்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Source link