பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.97.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நீட் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் – இயக்குநர் அமீர்
எழும்பூர் போராட்டத்தில் பேசிய இயக்குநர் அமீர், ஜனநாயகத்தைக் காப்பாற்ற இங்கே சிறிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிற இதேவேளையில், ஜன நாயகன் திரைப்படத்தைக் காப்பாற்ற ஒரு பெரும் கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் இதைவிட பெரிய கூட்டமாக இருக்கலாம், ஆனால் இந்தக் கூட்டம், அவர்களைவிட அறிவார்ந்தக் கூட்டம் என்பதை அவர்களுக்கு கூறுகிறேன். நீட் தேர்வை கொண்டு வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், எங்களிடம் அதற்கான ரகசியம் இருக்கிறது என்று சிலர் கூறுவார்கள். அவர்களும் கொண்டு வரமாட்டார்கள். அவர்களும் ஆட்சியை முடித்துவிட்டு சென்றுவிடுவார்கள். கடைசிவரை அந்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள்.
அனிதா மரணத்திற்கு ஆதரவு கொடுக்க வீட்டிற்கு சென்றவர்களும், அதிகாரத்தில் இருப்பார்கள், அவர்களும் செய்யமாட்டார்கள். ஆட்சியாளர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு நிலையைக் கொண்டுவருவார்கள் என நம்புவது ஒரு ஏமாற்றுவேலை. எந்த அரசும் செய்யாது, எந்தக் கட்சியும் செய்யாது என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். அனைத்துக்கட்சியும் ஒன்று சேர்ந்தால் முடியும், ஆனால் அதை அவர்கள் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது பிழைப்புவாதம், அதை அவர்கள் தொடர்ச்சியாக செய்வார்கள் என்றார்.
த.வெ.க ஆட்சியில் காவல் மரணங்கள் தொடர்கதை- பா.ஜ.க கண்டனம்
தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர் என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ, இக்கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.
த.வெ.க ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கின்றன. எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த நீதியையும், இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என த.வெ.க அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 24, 2026 07:33 IST
வினாத்தாள் கசிவு குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய நடவடிக்கை – பிரதமர் மோடி
வினாத்தாள் கசிவுகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதிக்கக்கூடியது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய மறு தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். வினாத்தாள் கசிவை தடுக்க நாடாளுமன்றத்தில் மசோதாவும் நிறைவேற்றப்படும் என பிரதமர் மோடி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்
-
Jul 24, 2026 07:32 IST
உண்ணா விரத போராட்த்தை முடித்துக்கொண்ட சோனம் வங்சுக்
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த 26 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வங்சுக் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்தர் சிங் ஆகியோர் முன்னிலையில் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், போராட்டம் வன்முறையாக மாறக்கூடும் என்ற அச்சத்தாலும் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
-
Jul 24, 2026 07:29 IST
மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – சி.ஜே.பி
சோனம் வங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டது நிம்மதி அளிக்கிறது. ஆனாலும், எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியுள்ள காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை ஜந்தர் மந்தரில் எங்கள் போராட்டம் தொடரும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
