சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2012 முதல் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜாவை, ஐபிஎல் 2026 சீசனுக்கு முன், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு டிரேடிங் செய்தனர்.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில், ரவீந்திர ஜடேஜா 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸ் களமிறங்கி, 135.03 ஸ்ட்ரைக் ரேட்டில் 266 ரன்களை அடித்தார். இதில், 24 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். 12 இன்னிங்ஸ் பந்துவீசி, அதில் 8.39 எகனாமியில் 10 விக்கெட்களை மட்டுமே எடுத்தார்.
ஜடேஜா பேட்டி: ஐபிஎல் 2026 சீசன் முடிந்தப் பிறகு பேட்டிகொடுத்த ரவீந்திர ஜடேஜா, ‘‘சிஎஸ்கேவிட்டு வெளியேறும் எண்ணத்தில் நான் இருக்கவில்லை. சொல்லப் போனால், டிரேடிங்கில் அனுப்பப் போகிறார்கள் என்ற விஷயம், கடைசிவரை எனக்கு தெரியாது. தெரிந்ததும் அணி நிர்வாகம் மற்றும் தோனியை தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால், யாரும் எனது அழைப்பை எடுக்கவில்லை’’ எனக் கூறினார்.
இதன்மூலம், ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேவிலேயே நீடிக்க விரும்பியது தெரிய வந்தது. மேலும், சமீப காலமாகவே ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம், செயலிலும் இல்லை. இந்நிலையில், தற்போது டிரேடிங்க் பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜடேஜா மீண்டும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். மேலும், மகேந்திரசிங் தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை டீபியாக வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, பயோவில் மஞ்சள் நிற குதிரையும் வைத்துள்ளார். இதன்மூலம், அவர் மீண்டும் சிஎஸ்கேவுக்கு வரப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
ரவீந்திர ஜடேஜா போனப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், கடந்த சீசனில், சிஎஸ்கேவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆகையால், இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகியோரில் ஒருவரை வாங்க சிஎஸ்கே நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது ஜடேஜாவின் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படம், பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளது. விரைவில், இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லை என்றால், ராஜஸ்தான் ராயல்ஸில் கேப்டன் ரியான் பராக் 4 ஓவர்களை வீச வாய்ப்புள்ளது. மேலும், வனிந்து ஹசரங்காவும் இருக்கிறார். மேலும், மகீஷ் தீக்ஷனா, விக்னேஷ் புதூர், ரவி பிஷ்னோய் போன்ற பல ஸ்பின்னர்களும் அணியில் இருக்கிறார்கள். இதனால், ஐபிஎல் 2027 சீசனில், ஜடேஜாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான்.
ஆகையால், ஜடேஜாவை சிஎஸ்கே, டிரேடிங்கில் வாங்க முயற்சிக்கும் பட்சத்தில், அது வெற்றிகரமாக முடியவும் வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு தற்போது 37 வயதாகிறது. இருப்பினும், அவரது பிட்னஸ் காரணமாக, அவரால் 40 வயதுவரை விளையாட முடியும். இதனால், ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு ஜடேஜா வந்தால், அவரை சிஎஸ்கே வாங்கி, கௌரவமாக வழியனுப்ப வேண்டும் என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஐபிஎல் 2027 சீசன் முடிந்தால், ஜடேஜாவுக்கு 38 வயதாகிவிடும். இதனால், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கழற்றிவிடவே அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா, சிஎஸ்கேவுக்கு வந்து விளையாடினால், பிறகு அவரை பீல்டிங் கோச்சாகவும் சிஎஸ்கேவால் பயன்படுத்த முடியும்.
