ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சம்பளம் வந்ததற்கான குறுஞ்செய்தியைப் (SMS) பார்ப்பது ஊழியர்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். ஆனால், அதே வேளையில் ஓய்வுக்குப் பிந்தைய செலவுகள் குறித்த கவலையையும் அது ஏற்படுத்துகிறது. அரசுப் பணிகளைப் போல இல்லாமல், தனியார் துறை சார்ந்த பணிகளில் நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இருப்பினும், உங்கள் அடிப்படைச் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பிஎஃப் பிடித்தம் செய்யப்பட்டால் முதுமைக்காலச் செலவுகள் குறித்த உங்கள் கவலையை வெகுவாகக் குறைக்கலாம்.
தனியார் துறை ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ( EPFO ) கீழ் உள்ள ‘ஊழியர் ஓய்வூதியத் திட்டம்’ (EPS) ஒரு வலுவான நிதிப் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு உங்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கும். அந்த ஓய்வூதியத் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
பிஎஃப் பணம் எவ்வாறு ஓய்வூதியமாக மாற்றப்படுகிறது?
ஓய்வூதிய நிதியில் (EPF) சேமிக்கப்பட்ட முழுத் தொகையும் ஓய்வின்போது ஒரே தவணையாக (lump sum) வழங்கப்படும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இதன் கட்டமைப்பு சற்று மாறுபட்டது. உங்கள் அடிப்படைச் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் முழுத் தொகையும் (100%) உங்கள் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. உங்கள் நிறுவனமும் அதற்கு இணையான தொகையைச் செலுத்துகிறது. ஆனால், நிறுவனத்தின் பங்களிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி (8.33%) நேரடியாக உங்கள் ஓய்வூதிய நிதிக்கு (EPS) செல்கிறது.
ஓய்வூதியம் பெறுவதற்கான மிக முக்கியமான நிபந்தனைகள்!
முதலில், ஓய்வூதியத்திற்குத் தகுதியான வகையில் நீங்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். முழு ஓய்வூதியப் பலனைப் பெற, உங்களுக்கு 58 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பிஎஃப் ஓய்வூதியத்தைத் தீர்மானிக்க EPFO அமைப்பு மிகவும் வெளிப்படையான மற்றும் எளிமையான சூத்திரத்தை உருவாக்கியுள்ளது:
மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியத்திற்குரிய சம்பளம் X மொத்தப் பணி ஆண்டுகள் / 70
தற்போதைய விதிகளின்படி, ஓய்வூதியக் கணக்கீட்டிற்கான அதிகபட்ச சம்பள வரம்பு (அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி) மாதத்திற்கு 15,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் உங்கள் ஓய்வூதியம் ரூ. 15,000 என்ற வரம்பின் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
ஓய்வூதியக் கணக்கீடு (உதாரணம்)!
ஓயவுபெறும் நிலையில் உள்ள ஒரு ஊழியரின் மொத்த EPS பணிக்காலம் (கூடுதல் ஆண்டுகளையும் சேர்த்து) 50 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வோம்:
அதிகபட்ச சம்பள வரம்பு: ரூ. 15,000
பணிபுரிந்த ஆண்டுகள்: 50
கணக்கீடு: 15,000 X 50/70 = 10,714.28
இதன்படி, அந்த ஊழியர் ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 10,714 நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவார். இதேபோல, ஊழியர்களின் சம்பளம் மற்றும் பணிபுரிந்த ஆண்டுகளைப் பொறுத்து நன்மைகள் மாறுபடும்.
முன்கூட்டியே ஓய்வூதியம் பெறுவதால் ஏற்படும் தீமைகள்!
58 வயதிற்கு முன்பே ஓய்வூதியம் பெறத் தொடங்கினால் நீங்கள் குறிப்பிடத்தக்க நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும். EPFO விதிகளின்படி, 58 வயதிற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறத் தொடங்கும்போது உங்கள் ஓய்வூதியத் தொகை 4 சதவீதம் குறைக்கப்படும். எனவே, 58 வயது வரை காத்திருப்பதே மிகவும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Source link
