இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஓபனர் இடத்திற்கு கடும் போட்டி: இந்நிலையில், இந்திய டி20 அணியில், ஓபனர்கள் இடங்களில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று வீரர்களை சேர்த்துள்ளனர். இதனால், இத்தொடரில் இந்திய அணி ஓபனர்களாக யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், ஓபனர்கள் குறித்து முன்கூட்டியே கம்பீர் முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, முதல் இரண்டு போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா ஆகிய இருவரில் யார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கிறார்களோ, அவர்களுக்கு மாற்றாக 3ஆவது போட்டியில் சாம்சனை ஆட வைக்க கம்பீர் முடிவு செய்துள்ளாராம். ஒருவேளை, சூர்யவன்ஷி, அபிஷேக் ஆகியோர் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடினால், மூன்றாவது போட்டியிலும் இதே பார்ட்னர்ஷிப்பை தொடர வைக்க கம்பீர் முடிவு செய்துள்ளாராம்.
சஞ்சு சாம்சன் நிலைமை என்ன? சாம்சனை இனி ஒன்டவுன் இடத்தில் ஆட வைக்க கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஷான் கிஷன், ஒருசில போட்டிகளை தவிர்த்து, பெரும்பாலும் 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு கீழ்தான் ஆடுகிறார். இதனால், கிஷனை நீக்கி, சாம்சனுக்கு ரெகுலர் வாய்ப்பு கொடுப்பது பற்றியும் கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஓபனர்கள், ஒன்டவுன் பேட்டர் ஆகியோர் இடது கை பேட்டர்களாக இருப்பதும் அணிக்கு பிரச்சினைதான். இதனால், ஒரு வலது கை பேட்டர், டாப் 3-ல் அவசியம். இதனால்தான், சாம்சனை புறக்கணிக்காமல், அவரை மூன்றாவது இடத்தில் பயன்படுத்துவது குறித்து கம்பீர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சர்வதேச டி20 பார்மெட்டில், இஷான் கிஷனின் ஸ்ட்ரைக் ரேட் 146.40ஆகதான் இருக்கிறது. அதுவும், சமீப காலமாகவே அரை சதம் அடிக்க 30+ பந்துகளை எடுத்துக் கொள்கிறார். மேலும், துவக்கத்திலும் நிதானமாக ஆடுகிறார். சாம்சன், டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் 199 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி, இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தால். இதனால்தான், சாம்சனை புறக்கணிக்காமல், மூன்றாவது இடத்தில் ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர்.
சொதப்ப வாய்ப்பில்லை: இந்திய அணி ஓபனர்கள் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா ஆகியோரால் இந்திய பிட்ச்களில் அபாரமாக செயல்பட முடியும். இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில், இருவரும் பெரிய ரன்களை அடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஒருவேளை, சூர்யவன்ஷியால், இத்தொடரில், ஒரு போட்டியில் கூட 30+ ரன்களை அடிக்க முடியவில்லை என்றால், அது கடும் விமர்சனத்தை பெறும்.
இதனால், இத்தொடரில் சூர்யவன்ஷி மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணிதான் நடத்துகிறது. டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தை வாடகைக்கு எடுத்து, மூன்று போட்டிகளை நடத்துகிறார்கள். முதல் போட்டியை 13ஆம் தேதியிலும், கடைசி 2 போட்டியை 15, 17 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. மூன்று போட்டிகளும், இந்திய நேரப்படி, இரவு 7 மணிக்கு துவங்கும்.
