ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 126 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 13.2 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
சூர்யவன்ஷி வரலாற்று சாதனை: இப்போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி, 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்களை குவித்து, இதன்மூலம், சூர்யவன்ஷி, மெகா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
என்ன சாதனை: சர்வதேச கிரிக்கெட்டில், குறைந்த வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இவர் பிறந்து 15 ஆண்டு, 118 நாட்கள் ஆகிறது. சச்சின் டெண்டுல்கர், பிறந்து, 16 ஆண்டு, 213 நாட்களில் அரை சதம் அடித்ததே, இதுவரை சாதனையாக இருந்தது. 1989ஆம் ஆண்டில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில், அரை சதம் அடித்திருந்தார்.
ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், முதல் 4 பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. பிரையன் பென்னெட் 0 (1), பென் கரண் 10 (8), டியோன் மைர்ஸ் 6 (14), கேப்டன் சிகந்தர் ராசா 4 (7) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர்.
பிறகு, ரியான் பர்ல் 35 பந்தில் 26 ரன்களையும், மத்வேரே 34 பந்துகளில் 39 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இறுதிக் கட்டத்தில், மருமணி 20 பந்தில் 27 ரன்களை எடுத்ததால், ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 125/7 ரன்களை எடுத்தது.
மயங்க் யாதவ், 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். பிரின்ஸ் யாதவ், 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். அறிமுக பௌலர், அசோக் சர்மா, 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.
இந்திய அணி இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படவில்லை. 8 பந்துகளில் ஒரேயொரு ரன்னை மட்டுமே அடித்தார். பிறகு, வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்களை சேர்த்து அவுட் ஆனார்.
மேலும், இஷான் கிஷன் 24 பந்துகளில் 35 ரன்களையும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில் 28 ரன்களையும் சேர்த்து அசத்தினார்கள். இதனால், இந்திய அணி, 13.2 ஓவர்களிலேயே 126/3 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
முசரம்பானி 4 ஓவர்களில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார். ங்கவரா 2.2 ஓவர்களில் 30 ரன்களை கசியவிட்டு ஒரு விக்கெட்டை எடுத்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான, 2ஆவது டி20 போட்டி, வரும் 25ஆம் தேதி, இதே ஹராரே மைதானத்தில் நடைபெறும். இப்போட்டியும், இந்திய நேரப்படி, மாலை 4:30 மணிக்கு போட்டி துவங்கும். இப்போட்டியிலும், இந்திய அணி வெற்றியைப் பெற்றால், தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
