இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது.
மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது மதிப்புகளையும் எதிர்காலப் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய சின்னம் ஒன்றை உருவாக்கும் போட்டியை அறிவித்துள்ளது.

1854-ல் நவீன அஞ்சல் துறையாக உருவெடுத்த இந்திய அஞ்சல் துறை, 170 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களின் வாழ்க்கையோடு பயணித்து வருகிறது. கடிதப் பரிமாற்றத்தைத் தாண்டி சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு, பில் வசூல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறது.
அதே நேரத்தில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தனது சேவைகளையும் தொடர்ந்து மாற்றி வருகிறது. இந்தப் பாரம்பர்யத்தையும் நவீன மாற்றத்தையும் இணைக்கும் வகையில் உருவாகும் சின்னம் அஞ்சல் துறையின் எதிர்கால அடையாளமாக அமைய உள்ளது.
Great mascots become legends. Now it's your turn to create the next one.
Design the official mascot of India Post and create a character that represents one of India's oldest and most trusted institutions. Whether you're an artist, designer, student or simply someone with a… pic.twitter.com/XYPTMjK1ga— India Post (@IndiaPostOffice) July 15, 2026
MyGov தளத்தின் மூலம் நடைபெறும் இந்தப் போட்டியில், பொதுமக்கள் அசல் சின்னம் வடிவமைப்பு, அதற்கான பெயர் மற்றும் அதன் கருத்தை விளக்கும் குறிப்பு ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை போட்டி நடைபெறுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் சின்னம், விளம்பரங்கள், அஞ்சல் தலைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும்.

முதல் மூன்று வடிவமைப்புகளுக்கு முறையே ரூ.75,000, ரூ.50,000 மற்றும் ரூ.25,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.
இது வெறும் வடிவமைப்புப் போட்டி மட்டுமல்ல; பல தலைமுறைகளைக் கடந்து வந்த இந்திய அஞ்சல் துறையின் பாரம்பர்யத்தை, இன்றைய டிஜிட்டல் தலைமுறையுடன் இணைக்கும் புதிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
