ஐபிஎல் 2027 சீசனுக்கான டிரேடிங்கில் வெளியேற ஹர்திக் பாண்டியா முடிவு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பல அணிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. தற்போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குதான் கேப்டன் தேவைப்படுவதால், அந்த அணி, ஹர்திக்கை வாங்க தீவிர ஆர்வம் காட்டியது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், 2 இளம் வீரர்களை மாற்றாக கேட்டதால், பேச்சு வார்த்தையில் கடும் இழுபறி ஏற்பட்டது.
கே.எல்.ராகுலும்: தற்போது, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய கே.எல்.ராகுலும் டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்துள்ளாராம். ரிஷப் பந்தை டிரேடிங்கில் வாங்கி, அவரை கேப்டனாக நியமிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால், கே.எல்.ராகுல் தனது விக்கெட் கீப்பர் இடத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னமும், இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க முடியும் எனக் கருதும் கே.எல்.ராகுல், ஐபிஎலில் விக்கெட் கீப்பராக ஆடதான் முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் தன்னால் விக்கெட் கீப்பர் பேட்டராக ஆட முடியாது எனத் தெரிந்ததும், கே.எல்.ராகுல் டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்துள்ளாராம். குறிப்பாக, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குதான், ஒரு இந்திய விக்கெட் கீப்பர் தேவைப்படுகிறார். இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கே.எல்.ராகுல் தொடர்புகொண்டு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஹர்திக் பாண்டியாவையும் வாங்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தீவிரமாக பேசி வருகிறது. இப்படி, இரண்டு முக்கிய வீரர்களை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் ஆர்வமாக இருக்கிறது.
டிரேடிங்கில் செல்லவில்லை என்றாலும்: இந்நிலையில், ஹர்திக் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒன்றாக விளையாடவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒன்றாக விளையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எப்படி? மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், டாப் ஆர்டரில் ஆடும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படுகிறார். கே.எல்.ராகுலுக்கு 34 வயதானாலும், அவரால் இன்னமும் 4-5 வருடங்களுக்கு விளையாட முடியும். இதனால், கே.எல்.ராகுல் கேகேர் அணிக்கு செல்லவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸுக்கு செல்லதான் அதிக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், கேகேஆர் அணியும், ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்கவில்லை என்றால், ஐபிஎல் 2028 மெகா ஏலத்திற்கு முன், ஐபிஎல் 2027 சீசனில், மும்பை இந்தியன்ஸில் நீடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால், இரண்டு வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாட வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ரிஷப் பந்த் டிரேடிங்: டெல்லி கேபிடல்ஸை தொடர்புகொண்ட லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் நிர்வாகம், ரிஷப் பந்தை கொடுத்துவிட்டு அக்சர் படேலை வாங்க முடிவு செய்தது. ஆனால், லக்னோ அணிக்கு செல்ல அக்சர் படேல் மறுத்த நிலையில், குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு விட்டுக்கொடுக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்து, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம்.
