Neet Paper Leak,நீட் தேர்வு மற்றும் மாணவர் போராட்டங்கள்: மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி! – questions raised by annamalai on neet exam protests why the delay in action by the central government

வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த பல ஆண்டுகளாக, நீட் (NEET) நுழைவுத் தேர்வுக்கு நான் எனது தனிப்பட்ட ஆதரவை உறுதியுடன் பதிவு செய்து வந்துள்ளேன். நாடு முழுவதும் ஒரே சீரான மாணவர் சேர்க்கை முறையைக் கொண்டு வரவும், ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் மருத்துவக் கல்வி எனும் தங்களின் கனவை மெய்ப்பிக்கவும் இத்தேர்வு ஒரு சிறந்த வாய்ப்பை அளித்தது என்பதே எனது வாதமாக இருந்தது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நீட் இளநிலை (NEET UG) வினாத்தாள்கள் மூன்று முறை கசிந்துள்ளன. சீரான அமைப்பை உருவாக்கும் எனக் கருதப்பட்ட ஒரு கட்டமைப்பு தோற்கும்போது, மீண்டும் அதே தேர்வு முறையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் மாணவர்களின் மன உளைச்சலும், அவர்கள் மீதான அழுத்தமும் எத்துணை பெரியது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாணவர் கொந்தளிப்பு

இவ்வளவு பெரிய தவறுகள் நடந்தபோதிலும், அதற்கு முறையான பொறுப்பேற்பு எதுவும் இல்லை. இத்தகைய சூழல்தான், அமைதியான முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை தெருவில் இறங்கித் தங்கள் நீதிக்காக உரக்கக் குரல் கொடுக்க வைத்தது என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு.

ஜனநாயக நாட்டில் தங்கள் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துவது என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால்:

பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏன் இத்தனை கால தாமதம் செய்தது? போராட்டம் தீவிரமடைந்து உச்சக்கட்டத்தை எட்டும் வரை, அமைதியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் காலம் தாழ்த்தியது ஏன்? அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்தது எது?

மாணவர்களுக்கான எச்சரிக்கை

அதே வேளையில், இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களுக்கும், அதற்குத் தலைமை தாங்குபவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும் போது, சுயநலம் கொண்ட சில சக்திகள் அந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்வது இயல்பு. அவர்கள் போராட்டத்தின் தொடக்கக் கோரிக்கைகளுக்கும் நோக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத கருத்துகளைப் பரப்புவார்கள் அல்லது தங்களின் சொந்த அரசியல்/சுயநலச் தேவைகளுக்காக போராட்டத்தையே திசைதிருப்ப முயல்வார்கள்.
அத்தகைய சுயநலவாதிகள் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது நீங்கள் மௌனமாக இருந்தால், போராட்டத்தின் முதன்மை நோக்கத்திலிருந்தே நீங்கள் விலகிவிட நேரிடும். எனவே, போராட்டக் களத்தை அந்நிய சக்திகள் ஆக்கிரமிக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய தருணம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக மாணவர்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும், வெளிப்படைத்தன்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். எழும் கவலைகள் மற்றும் சிக்கல்களுக்குச் விரைவான, பொருத்தமான தீர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உண்மையான பலமே, அந்நாட்டின் இளைஞர்கள் அதன் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் மீது வைக்கும் நம்பிக்கையில்தான் அடங்கியுள்ளது. நமது மாணவர்களே நாட்டின் கல்வி அமைப்பின் நியாயத் தன்மையிலும் நம்பகத்தன்மையிலும் நம்பிக்கையை இழந்துவிட்டால், அது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்தையே பெரும் ஆபத்திற்கு உள்ளாக்கிவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link