Rbi Plastic Notes,பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வந்தவுடன் காகித நோட்டுகள் செல்லாமல் போய்விடுமா? – will old paper notes be discontinued after plastic notes introduced in india check the truth here

பல நேரங்களில் நாம் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுகள் நனைந்து, கிழிந்து அல்லது சேதமடைந்துவிடும்ம். இந்தச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப் போகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் தயாராகியுள்ளன. இதுகுறித்த முக்கியத் தகவலை மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி பகிர்ந்துள்ளார்.

200 கோடி பிளாஸ்டிக் நோட்டுகள்!

ஒரு முன்னோட்டத் திட்டத்தின் (Pilot Project) கீழ், ரிசர்வ் வங்கி 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்புடைய தலா 100 கோடி பாலிமர் நோட்டுகளை அச்சிட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 200 கோடி நோட்டுகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. இதற்கான களப் பரிசோதனைக்கு நிதி அமைச்சகம் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இந்திய தட்பவெப்பநிலை மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப இவை எவ்வளவு நீடித்து உழைக்கக் கூடியவை மற்றும் நடைமுறைக்கு உகந்ததா என்பதைச் சோதிக்க இந்த நோட்டுகள் முதலில் சந்தையில் புழக்கத்தில் விடப்படும்.

பிளாஸ்டிக் நோட்டுகள் ஏன் அவசியம்?

அதிகப்படியான பயன்பாடு: 10 மற்றும் 20 ரூபாய் போன்ற சிறிய மதிப்புள்ள நோட்டுகள் தான் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிச் சந்தை முதல் ஆட்டோ கட்டணம் வரை இந்த நோட்டுகள் கைமாறுவது வழக்கம்.

நீடித்து உழைக்கும் தன்மை: காகித நோட்டுகள் விரைவில் நனைந்து கிழிந்துவிடும். ஆனால் பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீர், அழுக்கு மற்றும் ஈரப்பதத்தைத் தாங்கி நீண்ட காலம் உழைக்கும்.

அரசுக்குச் சேமிப்பு: பழைய காகித நோட்டுகளைத் தொடர்ந்து அச்சிடுவதற்கும், பழைய நோட்டுகளை அழிப்பதற்கும் அரசுக்கு அதிக செலவாகிறது. நீடித்த உழைப்பைக் கொண்ட பாலிமர் நோட்டுகள் இந்தச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்: இந்த நோட்டுகளில் சிறப்பு அம்சங்களும், அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும். இதன் மூலம் கள்ளநோட்டு தயாரிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.

பழைய காகித நோட்டுகள் செல்லாமல் போய்விடுமா?

புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்தால் பழைய நோட்டுகள் செல்லாமல் போய்விடுமோ என்று கவலைப்படத் தேவையில்லை. பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், பழைய காகித நோட்டுகள் தொடர்ந்து வழக்கத்தில் இருக்கும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. காகித நோட்டுகளைத் திரும்பப் பெறும் திட்டம் தற்போது எதுவும் இல்லை. இரண்டு வகையான நோட்டுகளும் ஒரே நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் தாக்கம்!

இப்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளையே (UPI) பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ரொக்கமும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் ஒன்றை ஒன்று பூர்த்தி செய்பவை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும், மக்கள் தங்கள் வசதிக்கேற்ப ரொக்கப் பணம் மற்றும் யுபிஐ இரண்டையும் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த முன்னோட்டத் திட்டம் வெற்றி பெற்றால், கிழிந்த மற்றும் பழைய நோட்டுகள் தொடர்பான தொல்லை எப்போதும் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source link