Small Cap Mutual Funds,ஸ்மால்-கேப் ஃபண்ட் இன்னும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறதா? – is small cap funds still attractive to investors in this 2026 year investors should know this before

கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மால்-கேப் (Small cap) ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை வழங்கியுள்ளன. இதனால், அனுபவமிக்க முதலீட்டாளர்களுடன் முதல் முறையாக பங்குச்சந்தையில் நுழையும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நிஃப்டி ஸ்மால்கேப் 250 – TRI (Nifty Smallcap 250 – TRI) குறியீடு ஆண்டுக்கு 17.3 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தை (CAGR) வழங்கியுள்ளது. இது நிஃப்டி 100 – TRI குறியீட்டின் 9.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும். நடப்பாண்டின் (YTD) அடிப்படையில், நிஃப்டி ஸ்மால்கேப் 250 – TRI குறியீடு 11.1 சதவீத லாபத்தைத் தந்துள்ளது. ஆனால், நிஃப்டி 100 – TRI குறியீடு 4 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டியபோதும் பல ஸ்மால் மற்றும் மிட்-கேப் பங்குகள் விரைவாக மீண்டு வந்து லார்ஜ்-கேப் பங்குகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டன. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது இப்போதும் லாபகரமானதா அல்லது அதற்கான வாய்ப்பு முடிந்துவிட்டதா?

அதற்கு, ஸ்மால் கேப் ஃபண்டுகளுக்கு முதலீடுகள் வர என்ன காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த சில காலாண்டுகளில் ஸ்மால்-கேப் நிறுவனங்கள் வலுவான லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையைத் தவிர்த்துப் பார்த்தால், நிஃப்டி ஸ்மால்கேப் 250 நிறுவனங்கள் 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 34 சதவீத வலுவான லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது மிட்-கேப் நிறுவனங்களின் 26 சதவீதம் மற்றும் லார்ஜ்-கேப் நிறுவனங்களின் 21 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.

வலுவான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) பங்களிப்புகள் மற்றும் உள்நாட்டு நிறுவன மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கேற்பு ஆகியவை வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்க உதவியுள்ளன. இது உலகளாவிய நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக் காலங்களைச் சமாளிக்க சந்தைக்கு உதவியாக இருந்தது. 2026 ஜூலை மாதம் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 77.68 பில்லியன் ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளன. இது ஈக்விட்டி ஃபண்டு பிரிவுகளில் மிக உயர்ந்த முதலீடாகும். அதே நேரத்தில் லார்ஜ் கேப் ஃபண்டுகள் 13.22 பில்லியன் ரூபாய் வெளியேற்றத்தைக் கண்டன.

ஏற்கனவே தங்கள் துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிறிய நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கு அதிக இடங்கள் உள்ளன. இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு செலவினங்கள், உற்பத்தித்துறை முதலீடுகள், பொருளாதாரத்தின் முறைப்படுத்துதல் மற்றும் சாதகமான மக்கள் தொகை ஆகியவை இன்றைய சிறிய நிறுவனங்களை நாளைய மிட்-கேப் அல்லது லார்ஜ்-கேப் வணிகங்களாக மாற்றும் வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், சமீபத்திய முதலீடுகளைக் கொண்டு மற்றொரு விதிவிலக்கான லாப காலம் தொடங்கப் போகிறது என்று உடனடியாக முடிவு செய்ய முடியாது என்கின்றனர்.

ஸ்மால்-கேப் பங்குகளின் உயர்வு, அவற்றின் மதிப்பீடுகளைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2024 உச்சத்திலிருந்து சந்தை குறைந்திருந்தாலும், லார்ஜ்-கேப் பங்குகளை விடவும், அதன் வரலாற்று சராசரி மதிப்பீடுகளை விடவும் கணிசமான பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. நிஃப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு ஆகஸ்ட் மாதடத தொடக்கத்தில் 34 என்ற PE (Price-to-Earnings) விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது அதன் 5 ஆண்டு சராசரியான 28.2 ஐ விட 21 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால் அதிக மதிப்பீடுகள் என்பது சந்தைப் பிரிவு உடனே சரியும் என்று அர்த்தமல்ல. இருப்பினும், அவை பாதுகாப்பு விளிம்பைக் குறைக்கின்றன. இதனால் சிறிய லாபக் குறைவு கூட ஒரு கடுமையான சரிவைத் தூண்டலாம் என்கின்றனர்.

ஸ்மால்-கேப் பங்குகள் லார்ஜ்-கேப் பங்குகளை விட அதிக நிலையற்ற தன்மைக் கொண்டவை என்பதால் இது மிகவும் முக்கியமானது. சந்தை அழுத்தக் காலங்களில் அவை பணப்புழக்கச் சிக்கல்களையும் எதிர்கொள்ளலாம். எனவே, ஒரு ஸ்மால்-கேப் போர்ட்ஃபோலியோவில் 20% அல்லது அதற்கு மேற்பட்ட சரிவு ஏற்படுவது சாதாரணமான ஒரு நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். ஸ்மால் கேப் முதலீடுகளுக்கு இப்போது தேர்ந்தெடுத்தே முதலீடு செய்யும் அணுகுமுறை தேவை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த காலத்தில் சிறந்த லாபத்தைத் தந்துள்ளது என்பதற்காக மட்டுமே ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, முதலீட்டாளர்கள் அதன் முதலீட்டுத் தத்துவம், போர்ட்ஃபோலியோ குவிப்பு, வெவ்வேறு சந்தை சுழற்சிகளில் நிலைத்தன்மை, ரிக்கிங் விகிதங்கள் மற்றும் ஃபண்ட் மேலாண்மை குழுவின் அனுபவம் ஆகியவற்றை ஆராய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Source link