இந்திய தபால் துறை யில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. தபால் துறை முதன்முறையாக ‘ஆவணங்கள்’ (documents) என்பதை வரையறுத்துள்ளது. இதில் கடிதங்கள் மற்றும் மறுவிற்பனை மதிப்பு இல்லாத அச்சிடப்பட்ட அல்லது இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் ஆகியவை அடங்கும். இவற்றுக்குக் குறைவான அஞ்சல் கட்டணங்கள் பொருந்தும். அதே சமயம் பிற பொருட்கள் ‘பார்சல்’ (parcel) வகையின் கீழ் வரும். வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் தொடர்பான பொருட்களான வரவேற்புத் தொகுப்புகள் (welcome kits), கடிதங்கள், சேமிப்புக் கணக்கு புத்தகங்கள் (passbooks), காசோலை புத்தகங்கள், வங்கி விவரங்கள், பிளாஸ்டிக் அட்டைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஆகியவை ‘கடிதங்கள்’ வகையின் கீழ் வகைப்படுத்தப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
மேலும், பான் கார்டுகள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆவணங்களும் இந்தக் கடித வகையிலேயே அடங்கும். வணிகம் அல்லது தொழில் சார்ந்த பொருட்கள் அல்லாத பட்சத்தில், 500 கிராம் வரை எடையுள்ள ராக்கி உறைகள் அல்லது பொட்டலங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் போன்றவையும் இந்த வகையிலேயே சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘குறிப்பு-1’-இல் (Note-1) குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் ‘பார்சல்’ வகையின் கீழ் அனுப்பப்படும். இதனுடன், சில்லறை மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்கான 24 மணி நேர மற்றும் 48 மணிநேர ‘ஸ்பீட் போஸ்ட்’ (Speed Post) சேவைகளுக்கான கட்டணங்களையும் தபால் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய சேவைகள் பொட்டலங்களை முறையே 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரத்திற்குள் விநியோகம் செய்வதை உறுதி செய்கின்றன.
அதேபோல, சில்லறை வாடிக்கையாளர்களுக்கான தற்போதைய சேவை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடித வகையின் கீழ் மொத்தமாக முன்பதிவு (bulk booking) செய்வதற்கான புதிய கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்த வாடிக்கையாளர்களுக்கு, 24 மணிநேர ஸ்பீட் போஸ்ட் சேவைக்கான கட்டணம் ஒரு பொருளுக்கு ரூ. 38 முதல் ரூ. 100 வரையிலும், 48 மணி நேர சேவைக்கான கட்டணம் ரூ. 48 முதல் ரூ. 72 வரையிலும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர ஸ்பீட் போஸ்ட் திட்டத்தின் கீழ், சில்லறை வாடிக்கையாளர்களிடம் எடை மற்றும் சேருமிடத்தைப் பொறுத்து ஒரு பொருளுக்கு ரூ. 38 முதல் ரூ. 186 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று தபால் துறை அறிவித்துள்ளது. 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள கடிதங்களுக்கான உள்ளூர் விநியோகக் கட்டணம் ரூ. 38 ஆகவும், நாடு தழுவிய விநியோகத்திற்கு ஒரு பொருளுக்கு ரூ. 94 ஆகவும் (ஜிஎஸ்டி தவிர்த்து) இருக்கும்.
தபால் துறை அறிவிப்பின்படி, 51 முதல் 250 கிராம் வரையிலான எடையுள்ள கடிதங்களுக்கான கட்டணம் ரூ. 118 முதல் ரூ. 154 வரையிலும், 251 முதல் 500 கிராம் வரையிலான கடிதங்களுக்கு ரூ. 140 முதல் ரூ. 186 வரையிலும் இருக்கும். ’48 ஸ்பீட் போஸ்ட்’ (48 Speed Post) சேவையைப் பொறுத்தவரையில், எடை மற்றும் சேருமிடத்தைப் பொறுத்து சில்லறை வாடிக்கையாளர்கள் ஒரு கடிதத்திற்கு ரூ. 61 முதல் ரூ. 121 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது, ’24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ’48 ஸ்பீட் போஸ்ட்’ ஆகிய சேவைகள் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
