ஐபில் தொடரின் நேற்றையப் (ஏப்ரல்.18) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் சன்ரைசர்ஸ் அணி சென்னை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.
புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.
இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய கேப்டன் இஷான் கிஷன், ” மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் அணியில் உள்ள திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் அவர்களின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்துவதை பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.
அவர்களே சொந்தமாகத் திட்டங்களை உருவாக்கி, அதற்கேற்ப பந்து வீசுகிறார்கள். இதனால் ஃபீல்டிங் அமைப்பதில் கேப்டனுக்கு அழுத்தம் குறைகிறது.
அவர்கள் ஆட்டத்தை முன்கூட்டியே கணித்துச் செயல்படுகிறார்கள். எங்கள் அணியின் வீரர்கள் பயிற்சி ஆட்டங்களில் அவர்கள் கடினமாக உழைப்பதையும், நாளுக்கு நாள் முன்னேறுவதையும் நான் பார்க்கிறேன்.
இது பேட்டிங் செய்வதற்கு மிகவும் நல்ல ஆடுகளம். ஆனால் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

இந்தப் போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. உண்மையைச் சொன்னால் நாங்கள் இப்போது புள்ளி பட்டியலைப் பார்ப்பதில்லை. இது மிக நீண்ட தொடர் என்று எனக்குத் தெரியும்.
நாங்கள் அமைதியாக, ஒவ்வொரு போட்டியாக கவனித்து விளையாட விரும்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..” என பேசியிருக்கிறார்.
