முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரதங்களில் ஒன்றாகவும், அதிகமான பக்தர்களால் கடைபிடிக்கப்படும் விரதமாகவும் இருப்பது சஷ்டி விரதம் ஆகும். வளர்பிறை, தேய்பிறை என இரண்டு பட்சங்களிலும் சஷ்டி திதி வந்தாலும், தேய்பிறையில் வரும் விரதங்கள், நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள், மனக்குறைகள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான ,நல்வாழ்வை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தேய்பிறை சஷ்டியில் முருகப் பெருமானை வீட்டிலேயே மிக எளிமையான முறையில் எப்படி வழிபட்டால் முருகப் பெருமான் அருளால் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானை வழிபடுவதற்கும், அவரது அருளை பெறுவதற்கும் மிகவும் ஏற்ற தினமாக சஷ்டி திதி கருதப்படுகிறது. தேய்பிறையில் வரும் சஷ்டி திதியில் விரதம் இருந்து, முருகப் பெருமானை மனதார வழிபட்டால் நினைத்து நடைபெறும் ன்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தேய்பிறை சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் மாதாமாதம் வரும் சஷ்டி தினம் அன்று வீட்டிலும், கோவிலிலும் பூஜைகள் மேற்கொள்பவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு சஷ்டி விரதம் இருந்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என்கிற நம்பிக்கையும் பக்தர்களிடையே உண்டு. சஷ்டி விரதம் குழந்தை வரம் மட்டுமல்ல! கேட்கும் வரங்கள் அத்தனையும் அளிக்கும் என்பது நம்பிக்கை.
சஷ்டி விரதம் :
மாதந்தோறும் வரும் சஷ்டி தினமன்று முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். உணவேதும் அருந்தாமல் அந்த நாளில் விரதம் இருந்து முருகனை நினைத்து, பக்தி பாடல்களை பாடினால் கேட்ட வரம் கிடைக்கும். இந்த நாளில் காலை முதல் மாலை வரை தண்ணீரைத் தவிர உணவு எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் சாப்பிடலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்வது உத்தமம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.
தேய்பிறை சஷ்டி வழிபாடு :
தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் கட்டாயம் வைக்க வேண்டும். அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். பூஜையில் தேங்காய் உடைத்து இருபுறமும் வைக்க வேண்டும்.முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்ய வேண்டும். முருகனின் விக்ரஹம் அல்லது வேல் வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே பால், சந்தனம், பன்னீர், தயிர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்தும் வழிபடலாம். முருகப் பெருமானுக்கு இஷ்டமான நைவேத்தியமாகிய அவல் உணவுகள், திணை மாவு ஆகியவற்றை படைக்கலாம். எதுவும் முடியாதவர்கள் பழங்கள் மட்டும் வைத்து படைக்கலாம். எளிமையான முறையில் தீப, தூப, ஆராதனை காண்பித்து கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
விரதம் நிறைவு செய்யும் முறை :
வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதே போல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. காலையில் அல்லது மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். இது போல் ஒவ்வொரு மாதமும் நாம் செய்து, வழிபட்டு வந்தால் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேறும். சஷ்டி தினத்தில் வீட்டில் கந்த சஷ்டி கவசம் ஒலிப்பதும், அதனை நாம் வாசிப்பதும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும். தீய சக்திகளை விரட்டி அடிக்கும். சுப காரியங்கள் கைகூடும். கன்னிப் பெண்கள் சஷ்டி விரதம் இருந்தால் நல்ல ஒரு மண வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.
சஷ்டி விரதம் இருப்பவர்களும், விரதம் இருக்க முடியாதவர்களும் இந்த நாளில் மனதார முருகப் பெருமானை நினைத்து, அவருக்குரிய மந்திரங்களை மனதார சொல்லி வழிபடலாம். “ஓம் சரவண பவ” மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற பாடல்களையும் இந்த நாளில் பாராயணம் செய்வதால் முருகனின் அருள் கிடைக்கும்.
Source link
