நீங்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் தானாக ரத்து செய்யப்படும்போது எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும்? இதுபற்றிய முழு விதிமுறைகள் இதோ..!
ரயில்களில் பயணம் செய்யும்போது பல்வேறு காரணங்கள் அல்லது மோசமான வானிலை காரணமாக ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. ரயில் ரத்து செய்யப்படும் பட்சத்தில் அதற்கான டிக்கெட் கட்டணத்தை முழுமையாகத் திரும்பப் பெறலாம். அதற்கான விதிமுறைகள் இந்திய ரயில்வேயில் உள்ளதால் பயணிகள் அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும், பணத்தைத் திரும்பப் பெறுவது எப்போது, எப்படி நடைபெறும் என்பது குறித்து பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ரயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டதா அல்லது ரயில் நிலைய கவுண்டரில் எடுக்கப்பட்டதா என்பதைப் பொறுத்தே பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறை அமைகிறது.
ஆன்லைன் டிக்கெட்டுக்கான ரீஃபண்ட் பணம்!
IRCTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் நீங்கள் இ-டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறை மிகவும் எளிதானது. இது முழுமையாகத் தானியங்கி முறையில் நடைபெறுகிறது. ரயில்வே நிர்வாகமே ரயிலை ரத்து செய்தால் நீங்கள் சொந்தமாக டிக்கெட்டை ரத்து செய்யவோ அல்லது IRCTC இணையதளத்திற்குச் சென்று TDR (டிக்கெட் வைப்பு ரசீது கோரிக்கை) தாக்கல் செய்யவோ வேண்டிய அவசியமில்லை.
நீங்களாகவே ரத்து செய்ய வேண்டாம்!
ரயில் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, உங்கள் டிக்கெட்டை நீங்களாகவே ரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும். நீங்களாகவே ‘ரத்து செய்’ (cancel) பட்டனை அழுத்தினால் வழக்கமான ரத்து கட்டணத்தை கணினி பிடித்தம் செய்துவிடும்.
டிக்கெட் பணம் எப்போது கணக்கில் வந்து சேரும்?
ரயில்வே அமைப்பின் மூலம் உங்கள் டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்படுகிறது. மென்பொருள் மற்றும் சேவைக்கான கட்டணங்கள், பொருந்தக்கூடிய வரிகள் நீங்கலாக, டிக்கெட் முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது வாலட்டில் 3 முதல் 7 வேலை நாட்களுக்குள் முழு டிக்கெட் தொகையும் திரும்ப வழங்கப்படும்.
ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் வழக்கமான படிவத்தை நிரப்பி டிக்கெட் வாங்கியிருந்தால் அதற்கான விதிமுறைகள் சற்று மாறுபடும். இவ்வகையான டிக்கெட்டிற்கான பணத்தைத் திரும்பப் பெற நீங்கள் நேரடியாக கவுண்டருக்குச் சென்று சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
கவுண்டர் டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுதல் தானாகவே நடைபெறாது. பணத்தைத் திரும்பப் பெற, நீங்கள் அருகிலுள்ள கணினிமயமாக்கப்பட்ட ரயில்வே முன்பதிவு கவுண்டருக்கு (PRS ) நேரில் செல்ல வேண்டும். ரயில்வே விதிமுறைகளின்படி, ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திலிருந்து 3 நாட்களுக்குள் (72 மணிநேரம்) கவுண்டருக்குச் சென்று உங்கள் அசல் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும். கவுண்டரில் அசல் டிக்கெட்டைச் சமர்ப்பித்து விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, எந்தவிதமான சேவை அல்லது ரத்து கட்டணமும் பிடிக்கப்படாமல் முழுத் தொகையும் உடனடியாக ரொக்கமாகத் திரும்ப வழங்கப்படும்.
ரயில் தாமதமாக வந்தாலும் டிக்கெட்டை ஒப்படைக்கலாம்!
ரயில் ரத்து செய்யப்படுவது மட்டுமில்லாமல், உங்கள் ரயில் மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமானாலும், நீங்கள் கட்டணமின்றி உங்கள் டிக்கெட்டை ரத்து செய்யலாம். ரயில்வே நிர்வாகம் ரயிலை ரத்து செய்யவில்லை என்றாலும், அது புறப்படும் நிலையத்திலிருந்து அட்டவணை நேரத்தை விட மூன்று மணி நேரத்திற்கு மேல் தாமதமாகி, நீங்கள் அந்த ரயிலில் பயணிக்க விரும்பவில்லை என்றால் ஆன்லைன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயில் புறப்படுவதற்கு முன் இணையதளத்தில் TDR கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கவுண்டர் டிக்கெட் வைத்திருப்பவர்கள் நேரடியாக ரீஃபண்ட் கவுண்டரில் டிக்கெட்டை ரத்து செய்து பணத்தைப் பெறலாம்.
ரீஃபண்ட் நிலையை சரிபார்ப்பது எப்படி?
ஆன்லைன் மூலம் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அதிகாரப்பூர்வ ‘ இந்திய ரயில்வே ரீஃபண்ட் இணையதளம்’ அல்லது IRCTC உதவி மையத்தைப் பார்வையிட்டு உங்கள் PNR எண்ணைக் கொண்டு பணத்தைத் திரும்பப் பெறும் நிலையை அறியலாம்.
Source link
