விநாயகர் வழிபாட்டின் ஒவ்வொரு சடங்கிற்கும், பூஜைக்காக படைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக அர்த்தமும், காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. விநாயகர் வழிபாட்டில் சாதாரணமாக நாம் நினைக்கும் உணவுப் பொருட்களுக்கும் கூட ஒரு அர்த்தம் உள்ளதாக சொல்லப்படுகிறது. விநாயகருக்கு படைக்கப்படும் பொருட்களுக்கு என்ன அர்த்தம், எதற்காக இவற்றை விநாயகருக்கு படைக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் விநாயகர் வழிபாட்டின் ஆழ்ந்த அர்த்தங்களை தெரிந்து கொண்டு, வழிபடுவதால் விநாயகரின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
விநாயகர் வழிபாடு என்பது மற்ற தெய்வ வழிபாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். விநாயகருக்கு படைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக அர்த்தம் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு படைக்கப்படும் பொருட்களின் அர்த்தம் மற்றும் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
விநாயகருக்கு அவல் படைப்பதன் நோக்கம் :
அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் அங்கும் இங்குமாக புரண்டு மிகக் கடுமையாய் இடிபடும். எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள் இடிபடுவது போல், மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் என வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான் ஆக வேண்டும். இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. வகுப்பறையிலுள்ள உங்கள் பெஞ்சில் செல்லும் எறும்பை நீங்கள் நசுக்கக் கூடாது. கடிக்க வந்தாலும் தூர தள்ளிவிட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று குறிப்பிடுவதே அவல் படைப்பதன் தத்துவமாகும்.
விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் :
மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காக தான். நெல்லை நிலத்தில் போட்டால் முளைக்கும். அதையே வறுத்து பொரியாக்கி நிலத்தில் போட்டால் விளையாது. நீ நெல் போல் இருக்காதே; பொரியாக மாறி விடு. பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையாதோ அது போல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகி விடு என்பதே இதன் பொருள்.
விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம் :
“மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை அடைந்து தான் ஆக வேண்டும். அதற்குரிய முன்னேற்பாட் டை நீ செய்து கொள். பொருள்தேடி அலைவதிலோ, 24 மணி நேரமும் உழைப்பதிலோ எந்த தவறும் கிடை யாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ என்ன செய்திருக்கிறாய் என்று எண்ணிப்பார். உனது மனைவி குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். இது உன் குடும்பத்திற்கு மட்டுமே ஆகும். ஆனால், இந்த உலகத்திற்காக நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான். குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய்தாயா என யோசித்து பார். அப்படி செய்யாமல் இருந்தால் அதை இன்றே செய்துவிடு. ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி போல் பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும்.அதாவது, உன் வாழ்க்கை அழிந்து போகும். அதற்கு முன்னதாக நீ காய் பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்து விடு” என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.
சிதறுகாய் உடைப்பதன் காரணம்:
எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற் கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கையில் வைத்திருந்த தேங்காய்களை அசுரனை நோக்கி எறிந்தார். தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல், அசுரனும் பொடிப் பொடியாகிப் போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத் தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப் படுகிறது. இதற்கு மற்றொரு காரணமாக, மனிதனின் ஆணவத்தை இறைவன் முன் உடைத்து, பக்தியுடன் வழிபட வேண்டும் என்பதே இதன் நோக்கமாக சொல்லப்படுகிறது.
Source link
