புதுடெல்லி: அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, தன்சிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் காரணமாக 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் 4.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, போர்வை உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் வழங்கி வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலம் முழுவதும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளும் அவர்கள் செய்து வருகின்றனர்.
இதையடுத்து டெல்லியில் நேற்று அசாம் மாநில எம்.பி.க்கள், மாநில அதிகாரிகளுடன் மழை, வெள்ள மீட்புப் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்டுள்ள 4.45 லட்சம் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள உதவிகள், நிவாரண முகாம்களின் நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். தற்போது வரை அங்கு 631 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
