திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.
“தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியல் செய்திருக்க வேண்டுமா? வேண்டாமா? கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு தொடர வேண்டும் என்று நான் சொன்னேனா இல்லையா? ஏன் வழக்கு போடவில்லை.
அவர் மீது வழக்கு போட என்ன தயக்கம். காலம் தாழ்த்தி வந்தார். வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். அதனால் தான் கும்பல் கூடியது. நெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்கிறபோது அதற்கு பொறுப்பேற்கக்கூடிய அத்தனைப் பேரையும் வழக்கில் சேர்த்திருக்க வேண்டுமா? வேண்டாமா? இந்த அணுகுமுறை தானே காரணம்.
அப்போதே விஜய் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டுமா? வேண்டாமா? திமுகவை குறி வைத்து விஜய் பேசும்போது எதிர்ப்பு அரசியலை செய்திருக்க வேண்டாமா? ஆனால் நீங்கள் பேசவில்லை, நான் பேசினேன். விஜய் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்தப் பிள்ளை என்று…அன்றைக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இன்றைக்கு எப்படி நம்பிக்கை வந்தது.
விஜய் அதிமுக, பாமக, பாஜக ஆதரவைக் கேட்கவில்லை. காங்கிரஸ் ஆதரவைக் கேட்டார். திருமாவளவன் ஆதரவைக் கேட்டார். ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்துவிட்டு கூட்டணி வைத்திருக்கிறீர்களே? என்று என்னைக் கேட்கிறார்கள். ஏன்? ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று விமர்சித்த திருமாவை கூட்டணிக்குள் சேர்த்தீர்கள் என்று விஜய்யை யாரும் கேட்கவில்லை.
அவர்தானே எங்களிடம் வந்தார். நாங்கள் அவரிடம் போகவில்லையே. அவருக்கு தான் தேவை இருந்தது. எங்களுக்கு தேவையில்லையே. கூட்டணிக்கு பெயர் வைக்கும்போது சமூகநீதி வெற்றிக் கூட்டணி என்று சொன்னார்கள்.

வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற குரலை உயர்த்திச் சொன்னவன் திருமாவளவன்.
மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி இப்படித்தான் உருவானது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் விடுதலை சிறுத்தை சொந்தங்களே, யார் விமர்சித்தாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம்” என்று பேசியிருக்கிறார்.
