சென்னை: தவெகவில் மனிதவள மேலாண்மை துறையின் அமைச்சராக இருக்கும் சரத்குமாருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக சரத்குமார் செயல்பட்டு வரும் நிலையில் அந்த மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் தவெக தேர்தல் பணிக்குழுவில் அவரது பெயர் இல்லை. இதனால் முதல்வர் விஜய், அமைச்சர் சரத்குமாரை தவெகவில் ஓரம்கட்டி இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 9 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த மரகதம் குமாரவேலுக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தாராபுரம் தொகுதியிலும் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்தியபாமாவிற்கு முதல்வர் விஜய் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளார்.
இந்த இடைத்தேர்தலையொட்டி தவெகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளையில் மதுராந்தகம் சட்டசபை தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், இணை பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோரும், துணை பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்எஸ் பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் அமைச்சர் சரத்குமாருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. சரத்குமார் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவா உள்ளார். அதுமட்டுமின்றி செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார். இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் சட்டசபை தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்திற்குள்ளேயே வரும் நிலையில் சரத்குமார் தவெகவில் ஓரம்கட்டப்பட்டுள்ளார். இதனால் அவர் மீது தவெக தலைமை அதிருப்தியில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தவெக அமைச்சராக சரத்குமார் பொறுப்பேற்ற பிறகு அவர் தொடர்பான பழைய வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்ப்பதும், அவர் ரூபாய் நோட்டில் ஏதோ ஒன்றை ஏடிஎம் கார்டு வைத்து தூளாக்குவதும் பதிவாகி இருந்தது. அது போதைப்பொருள் என்று எதிர்க்கட்சியினர் கூறினர்.
ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். தனது குழந்தையின் மருத்துவ மாத்திரையை தான் தூளாக்கியதாக அவர் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் இருந்தே அமைச்சர் சரத்குமார் மீது தவெக தலைமை அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போதையசெயல் அதனை உறுதியாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி அடுத்ததாக அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது சரத்குமாரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட கூட வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
