அரியானா: முன்னாள் மந்திரியின் மகன் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

சண்டிகர்,

அரியானாவில் முன்னாள் மந்திரியின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அரியானா மாநில முன்னாள் மந்திரி ஜஸ்விந்தர் சிங் சந்து. இவர் அரியானாவின் பிஹொவா தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக செயல்பட்டுள்ளார். மேலும், அரியானா வேளாண் துறை மந்திரியாகவும் செயல்பட்டார். ஜஸ்விந்தர் சந்து உடல்நலக்குறைவால் கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதனிடையே, ஜஸ்விந்தர் சிங்கின் மகன் ககன்ஜித் சந்து (வயது 48). இவர் அரியானாவின் கைதல் மாவட்டம் கோகட் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இந்நிலையில், ககன்ஜித் சந்து இன்று கோகட் கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பண்ணை வீட்டில் இன்று யாரும் இல்லாத நேரத்தில் உரிமம்பெற்ற தனது கைத்துப்பாக்கியால் ககன்ஜித் சந்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று ககன்ஜித் சந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ககன்ஜித் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link