தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் மூத்த அரசியல் தலைவர்களுக்கு இடையே அரங்கேறிய வார்த்தைப்போர் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது.
வழக்கமாக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடப்பது சகஜம் என்றாலும், இன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) ஆகிய மூவேந்தர்களின் பெயர்களும் அடிபடும் அளவிற்கு இந்த விவகாரம் அரசியல் களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
“3 நாள் டைம் தர்றேன், தயாராகி வாங்க!” – விவாதத்தைத் தொடங்கிய உதயநிதி
இன்று சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் காவல்துறை மானிய கோரிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது தவெக அரசின் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், ஒரு கட்டத்தில் முதலமைச்சருக்கு நேரடியாகச் சவால் விடுத்தார்.
“நான் கேட்கும் காரசாரமான கேள்விகளுக்கு எல்லாம் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நன்றாக தயாராகி வர வேண்டும்; வரும் திங்கள்கிழமை இதற்கெல்லாம் அவர் முறையான பதிலுரையை வழங்க வேண்டும்” என பேசினார் உதயநிதி.
“நான் பேசும்போது ஓடக்கூடாது; Promise பண்ணுங்க!” – முதல்வர் விஜய் அதிரடி சவால்
உதயநிதி ஸ்டாலினின் இந்த சவாலுக்கு உடனடியாக மைக் பிடித்து பதிலடி கொடுத்தார் முதல்வர் விஜய். அவர் பேசுகையில், “எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை நான் அவையில் விரிவாகவும், தெளிவாகவும் விளக்கமளிப்பேன்.
ஆனால், உங்கள் மூலமாக எதிர்க்கட்சியினரிடம் நான் ஒன்றை கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். திங்கள்கிழமை நான் பதில் பேசும்போது அவையில் இருக்கும் யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது (வெளிநடப்பு செய்யக்கூடாது); அதற்கு எனக்கு ஒரு Promise (சத்தியம்) செய்து தர வேண்டும்” எனத் தனது பாணியில் அதிரடியாக சவால் விடுத்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
“இப்போ யார் ஓடிப்போனாங்க?” – அடுத்த நொடியே அம்பு விட்ட உதயநிதி!
முதலமைச்சர் விஜய் சவாலை முன்வைத்துவிட்டு வெளியேறிய உடனே மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், அவரை செம மாஸாக கலாய்த்துப் பேசினார்.
“யாரும் ஓடக்கூடாது என்று சவால் விட்டுவிட்டு, அவையில் இருந்து முதலமைச்சர் விஜய் தற்பொழுது வெளியேறியுள்ளார். இதை நீங்கள் நேரலை செய்தீர்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது கடைசியாக அவையை விட்டு யார் ஓடிப்போனார்கள் என்பதை மக்கள் அனைவரும் பார்த்திருப்பார்கள். நான் அவரிடம் 3 நாட்கள் நன்றாக தயாராகி வாருங்கள் என்றுதான் கூறினேன்” என உதயநிதி பதிலடி கொடுக்க, அவையில் சிரிப்பலையும் பரபரப்பும் ஒருசேரத் தொற்றிக்கொண்டது.
களத்தில் குதித்த ஓபிஎஸ்! அவைக்குறிப்பை நீக்கக் கோரி பிடிவாதம்!
விவாதம் இத்துடன் முடிவடையவில்லை. முதல்வர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவருக்கு இடையேயான இந்த மோதலுக்கு நடுவே, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் (OPS) திடீரென எழுந்து இந்த விவாதத்தில் குறுக்கிட்டார்.
அவையில் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சர் விஜய் பயன்படுத்திய வார்த்தைகளுக்குக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தார். “முதலமைச்சர் அவர்கள் பேசிய ‘நான் பதில் சொல்லும் போது யாரும் ஓடக் கூடாது’ என்ற வார்த்தை அவையின் மரபுகளுக்கு முரணாக உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குத்திக் காட்டுவது போல் உள்ள இந்த குறிப்பிட்ட வார்த்தையை உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் பிடிவாதமாகக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலடி கொடுத்த சபாநாயகர், அதல்லாம் நீக்க முடியாது என தெரிவித்தார்
