புதுடெல்லி
தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு கவுண்ட்டர்களில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் வழிமுறை உள்ளது. ரெயில் பயணத்தை திட்டமிடாமல் கடைசி நேரத்தில் பயணிக்க விரும்புபவர்களுக்கு தட்கல் டிக்கெட் எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
தட்கல் முன்பதிவு டோக்கன்கள்
அந்த வகையில் ஒரு ரெயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் காலை தட்கல் டிக்கெட் எடுக்க முடியும். ஏ.சி. பெட்டிகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கும், இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்குகிறது.
ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல், ஏ.சி. தட்கல் முன்பதிவுகளுக்கு ஆரம்பத்தில் 10 டோக்கன்கள், ஏ.சி. அல்லாத தட்கல் முன்பதிவுகளுக்கு 15 டோக்கன்களும் வழங்கப்படும்.
ஏ.சி. தட்கல் டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9 மணி வரையும், ஏ.சி. அல்லாத தட்கல் டோக்கன்கள் காலை 9 மணி முதல் 9:30 வரையும் வழங்கப்படும். நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், குறிப்பிட்ட நேரத்தில் வந்து டிக்கெட் பெற இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
