ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு – கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்திருக்கிறான்.

தந்தையைப் பிரிந்து தாயைப் பறிகொடுத்த மாணவி, உறவினரின் அரவணைப்பில் வாழ்ந்துவந்திருக்கிறார். மாணவியின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்து, அவரிடம் அடிக்கடி தகாத முறையில் நடந்துகொண்டதோடு பாலியல் வன்முறையிலும் ஈடுபட்டிருக்கிறான் புருஷோத்தமன்.

இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்திருக்கிறார். இந்த நிலையில்தான் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, தனது வீட்டுக்கு வருமாறு புருஷோத்தமனை அழைத்திருக்கிறார் மாணவி. அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு புருஷோத்தமனிடம் கெஞ்சி வற்புறுத்தியிருக்கிறார்.

புருஷோத்தமன்

இதனால், ஆத்திரமடைந்த புருஷோத்தமன் செல்போன் சார்ஜர் ஒயரால் மாணவியின் கழுத்தை நெரித்து துடிக்கத் துடிக்க கொலை செய்திருக்கிறான். பிறகு கட்டிலுக்கு அடியில் மாணவியின் பிணத்தை மறைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறான் புருஷோத்தமன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆற்காடு தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து சிறையிலடைத்திருந்தனர். இவ்வழக்கு விசாரணையும் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், புருஷோத்தமனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புருஷோத்தமன் சிறையில் அடைக்கப்பட்டான்.

Source link