சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பது குறித்து நாளை மதியம் 2 மணிக்குள் அறிவிக்கப்படும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்த ஆலோசிக்க நாளை திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநிலக்குழு கூட்டம் கூட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா ராஜினாமா தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர். இதனால் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்தல் முடிந்து இரண்டு மாதத்திற்குள்ளேயே இருவரும் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு கட்சியில் இணைந்திருப்பது அப்பட்டமான குதிரை பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது தவெக சார்பில் ராஜினாமா செய்த சத்யபாமா, மரகதம் குமரவேலுக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க விஜய்யின் ஆட்சிக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என்றும், தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் இடதுசாரிகள் கட்சிகள் அறிவித்துள்ளன. இதனால் நடக்க உள்ள இரு தொகுதி இடைத்தேர்தலிலும் யாருக்கு இடதுசாரிகள் கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மாநில செயலாளர் பெ சண்முகம் தலைமையில் சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ சண்முகம் கூறியதாவது:-
நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து முக்கியமான அரசியல் முடிவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே, கட்சியின் அவரச மாநிலக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. மாநிலக்குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்டியின் நிலைபாடு குறித்து முடிவு செய்யப்படும். நாளை மதியம் 2 மணிக்குள் அறிவிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த போது, இது ஆரோக்கியமற்ற அரசியல், சந்தர்ப்பவாத நிலை என ஏற்கனவே கூறியிருக்கிறோம். அந்த கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை” என்று கூறினார்.
