இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிருப்தி அணிக்கு இடமில்லை: அதிமுகவில் சலசலப்பு

இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்களுக்கு இடம் இல்லாதது, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் ஆளும்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே வேட்பாளர்களை அறிவித்துள்ள முக்கிய கட்சிகள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு குழு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இடைத்தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் இடம் பெறாதது, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்கோடு திகழும் சி.வி.சண்முகத்தை களமிறக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல். அதேபோன்று கொங்கு பகுதியான தாராபுரத்திலும் எஸ்பி வேலுமணி களப்பணியாற்றினால் கூடுதல் பலம் எனக் கருதுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இவ்விருவரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களா என அதிமுக அதிருப்தி அணியில் உள்ள சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷிடம் கேட்டபோது, “தேர்தல் பிரச்சாரக் குழுவில் இருவருக்கும் இடமளிக்கும் பட்சத்தில் நாங்கள் பரப்புரைக்கு செல்வோம்,” என்றார்.

Source link