டெல்லி: டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை அழைத்து வந்த பிரதமர் மோடியை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி புகழ்ந்து தள்ளியுள்ளதோடு, ஒரு இந்தியனாக பெருமை கொள்கிறேன் என்று கூறி கவனம் பெற்றுள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்பட 11 நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் 18 வது உச்சி மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது.இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள், பிற நட்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 2 பேரும் பிரதமர் மோடியை சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது பற்றி விவாதித்துள்ளனர். நேற்று முதல் நாள் பிரிக்ஸ் மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்தது. நேற்றைய தினம் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டவர்கள் மாநாடு நடக்கும் வளாகத்தில் மரக்கன்று நடவு செய்து தண்ணீர் ஊற்றினர்.
இந்த போட்டோவை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் பிரதமர் மோடியை ரவி சாஸ்திரி புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இததொடர்பாக ரவி சாஸ்திரி தனது எக்ஸ் பக்கத்தில், ”ஒரு இந்தியனாக இதைவிட பெருமையான தருணம் இருந்தது இல்லை. அதிபர் புதின், அதிபர் ஜி மற்றும் மகத்தான பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்தியாவில் ஒன்று கூடியுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் சர்வதேச அளவிலான டிப்ளமஷி இதுவாக உள்ளது. மோடி ஜி உங்களுக்கு பாராட்டுகள்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
