தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள முதல் திரைப்படமான சிக்மா படத்தில், சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்சசியில் பேசிய அவர், இப்படத்திற்கு விஜய் தான் அடையாளமும் மிகப்பெரிய உத்வேகமும் என்று கூறி, விஜய்க்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
அதே நிகழ்வில், தனது முதல் திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானவுடன் முதலில் யாருக்கு தொலைபேசியில் அழைத்து தகவலைப் பகிர்ந்துகொண்டார் என்பதையும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். சிக்மா திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் கிஷன், இப்படத்தில் விஜயின் பெயருக்கு இருக்கும் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்தப் படத்திற்காக நாங்கள் நேர்மையாக உழைத்திருந்தாலும், எங்களுடைய முதலமைச்சர் விஜய் தான் ‘சிக்மா’ படத்தின் அடையாளமும் மிகப்பெரிய உத்வேகமும். அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி. நான், சஞ்சய் மற்றும் லைகா நிறுவனம், உங்கள் பணியின் நற்பெயரால் கிடைக்கும் ஆதரவை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கப் போகிறோம்” என்று சந்தீப் கிஷன் கூறினார்.
தொடர்ந்து, விஜயிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகக் கூறிய ஒரு வரியையும் அவர் மேற்கோள் காட்டிய சந்தீக் கிஷான், உங்கள் புன்னகையால் அவர்களை வெல்லுங்கள். உங்கள் வெற்றியால் அவர்களைப் புதைத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் தனது தாய்க்குத்தான் தொலைபேசியில் அழைத்து இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதாக தெரிவித்தார். எப்போதும் தனக்கு ஆதரவாக இருந்த தனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்த அவர், தனது முதல் முழுநீளத் திரைப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்தும் பேசினார்.
முதல் நாள், முதல் காட்சியைப் படமாக்கும்போது நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். ஆனால், ஒரே ஒரு டேக் எடுத்த பிறகு, நான் முழுமையாகப் பணியில் ஈடுபட்டுவிட்டேன்” என்று ஜேசன் சஞ்சய் கூறினார். மேலும் தன்னைப் போன்ற முதல் முறையாக திரைப்படம் இயக்கும் இயக்குநர்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும் வகையில் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
நீங்கள் எவ்வளவு பதற்றமாக இருந்தாலும், உங்கள் வேலையை நீங்கள் ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். முதல் முறையாக இயக்குநராகும் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது இதுதான்” என்று அவர் தெரிவித்தார்.
சிக்மா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, ஜேசன் சஞ்சய்க்கு பல்வேறு உணர்வுகள் ஏற்பட்டுள்ளன. தனது முதல் திரைப்படத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த திருப்தி ஒருபுறம் இருந்தாலும், தினமும் தனது படக்குழுவினரைச் சந்திக்கும் வழக்கம் முடிவுக்கு வந்தது அவருக்கு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“படப்பிடிப்பு நிறைவு நாளில் மிகுந்த திருப்தி இருந்தது. அதே நேரத்தில், இனி தினமும் என்னுடைய படக்குழுவினரைச் சந்திக்க முடியாது என்பதால் சற்று வருத்தமாகவும் இருந்தது” என்று அவர் கூறினார். சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சந்தீப் கிஷன், தனது ஆரம்பகால திரையுலகப் பயணம் குறித்த சுவாரஸ்யமான சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். தெலுங்கு சினிமாவில் தனது பெயரைப் பதித்திருந்த அவர், பின்னர் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தியதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
நான் இங்கேதான் பிறந்து வளர்ந்தேன். தெலுங்கில் நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்தபோது, நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் எனக்கென்று நல்ல பெயரை உருவாக்கிக்கொண்டேன். அதன் பிறகு அனைவரும் என்னை அறியத் தொடங்கினர்” என்று சந்தீப் கூறினார்.
2008ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சந்தீப் கிஷன், 2010களின் தொடக்கத்தில் டோலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது இருப்பை வலுப்படுத்தினார். ஆனால், சென்னையில் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு எதிர்பாராத சந்திப்பு அவரது சிந்தனையை மாற்றியது.
“நாங்கள் சென்னையில் ஒரு தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது, ஒரு பாட்டி என்னிடம் வந்து, ‘நீங்கள் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. நானும் பார்க்கக்கூடிய ஒரு படத்தை தயவுசெய்து உருவாக்குங்கள்’ என்று கூறினார். அதற்குப் பிறகு ‘மாநகரம்’, ‘ராயன்’, ‘கேப்டன் மில்லர்’, தற்போது ‘சிக்மா’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
சிக்மா திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷனுடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படம் திரைப்படம் முதலில் ஜூலை 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் நடித்த கடைசி திரைப்படமாக ஜன நயாகன் ஜூலை 23-ந் தேதி வெளியானதால், சிக்மா ரிலீஸ் தள்ளிப்போனது. இதையடுத்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி சிக்மா திரைப்படம் வெளியாகும் என புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
